ஞாயிறு, 17 ஜனவரி, 2010

என்ன செய்யும் என்கண்கள்

Posted on PM 9:20 by செல்வராஜா மதுரகன்



உன்கண்கள் காதலை உமிழ்ந்துகொண்டிருந்தன


என்கண்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை
காதலை கண்களினால் வெளிப்படுத்தும் ஆற்றலை இன்னமும் நான் பெற்றுக்கொள்ளவில்லை

சன செருக்கடியான புகையிரதங்களில் புதைக்கப்பட்டிருந்த
பொழுதுகளிலும் தனிமையில் உன்னை நோக்கி
நெருங்கிக்கொண்டிருந்தேன்.

சன சந்தடியற்ற வீதிகளிலும் உன்னுடைய ஒவ்வொரு
உணர்வுகளிலும் நான் பரிணமித்துக்கொண்டிருந்தேன்.

கார்த்திகை மாதத்தில் பூத்துக்கொண்ட பூவொன்று மழைக்கால
இரவுப்பொழுதுகளில் விழித்திருப்பதைப் போன்றது
நீ கொண்ட காதல் என்பது எனக்குப்புரியாமல் இல்லை..

எந்த அளவில் இந்த உணர்வுகளைப்பற்றிக்கொள்வது
என்பதில்தான் நான் இன்னமும் முழுமைபெறவி்ல்லை

இன்னமும் உன் கண்களில் காதல் உமிழப்பட்டுக்கொண்டுதான்
இருந்தது..
இன்னும் சில நாட்களில் அதுவும் தோற்றுப்போகக்கூடும்
பலமுறை முழுமை பெறாத கவிதைகளுடன் கிழித்துப்போடப்பட்ட
என்னுடைய காகிதங்கள்போல்..

சில நாட்களில் எதுவேண்டுமானாலும் நிகழலாம்

இன்றுவரை உன்னைக்கடந்து நான் போகும்போது
நான் மென்று விழுங்கும் உமிழ்நீரில் கரைந்துபோகிறது
உன்மீதான எனது காதல்..

என்னசெய்வது வார்த்தைகளைத்தவிர வேறு எந்த
ஊடகத்தாலும் காதலை வெளிப்படுத்தும் ஆற்றல் என்னிடம் வசப்படவில்லை..

நான் உருண்டு கொண்டிருக்கும் புல்வெளிகள் விரைவில் வசந்தகாலத்தை நிறைவு செய்துகொள்ளக்கூடும்

இன்னமும் ஒவ்வொருநாள் காலையிலும்
நான் சுவாசிக்கும் புதிய காற்றில் உன்வாசம் கலந்துதான் இருக்கிறது..

என்ன செய்ய என் கண்களோ தலையணையுறைகளை
நனைப்பதிலும் வேறேதும் புரிவதில்லை.



அன்புடன் மதுரகன் 


No Response to "என்ன செய்யும் என்கண்கள்"

 

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...