செவ்வாய், 28 செப்டம்பர், 2010

கவிஞர் காரையம்சனின் நிலவின் பிரசவம் அவள்


கவிஞர் காரையம்சன்(நடேசன் அகிலன்) கிழக்கிலங்கையின் காரைதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயில்பவர். அவரது வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாக இது... அவருடைய காதல் கவிதைகளின் தொகுப்பொன்று இசையுடன் உங்களுக்காக. இது அவரின் அனுமதியுடன் இங்கே பதிவிடப்படுகின்றது....



பார்த்துக் கருத்துக்களைப் பரிமாறவும்....


அன்புடன்
மதுரகன்.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

இரு கண்களும் சில சூரியன்களும் - பாகம் 2


பாகம் இரண்டு
அன்று..
வெகு நாட்களுக்குள்ளேயே சலனமடைந்து கிடந்த
என் மனதில் அவள் தவிர்க்கப்படவேண்டியவளானாள்....
             
ஆனாலும் சாக்கடை நீரும் கஷ்டப்பட்டாவது            
அந்த தேவதையின் பிம்பத்தை தன்னில் பிரதிபலிக்கவே            
எண்ணுவது போலே...
          
தீ சுட்டபின்பும் அது சுகம் என்றெண்ணி மெல்லக்கைகளை
அருகே பிடிக்கும் குழந்தை போலே..
கட்டுப்பாடிழந்த என்கால்கள் சரியாக அந்தப்பொழுதில் என்னை            
அந்த நடைபாதைக்கு அழைத்துச்செல்கின்றன...
           
            ஏதோ ஒரு அவமானம் அந்த வீதியில் என்னை
            நிர்வாணமாக்குகின்றது...
            என் தன்மானக்கொம்புகள் உடலெங்கும் குத்திட்டு நிற்கின்றன..

என்றாலும்...
            கடைக்கண்ணால் பார்த்தபடி தவிர்க்கமனமின்றி இனிப்பை மறுக்கும்
            சர்க்கரை நோயாளியைப்போல நானும் அகல்கிறேன்...
            வானைப்பார்த்தபடி...

என் கால்கள் விசித்திரமானவை..
            வெகுதூரம் என்னைச்செல்ல விடாமல் அந்த நடைபாதைக்கு
            சற்று விலகியுள்ள அந்த புற்றரையில் என்னனை ஓய்வு படுத்தின..

            பாதிப்பு என்ன என்று புரியாமல் சுனாமியைப்பார்த்து விட்டுத்தான்
            போவேன் என்று கடற்கரையில் காத்திருக்கும் சிறுவனைப்போல               
            நானும் அடம்பிடித்துக்கொண்டு நிற்கிறேன்...  அந்தக்காலடிகளுக்காய்..

என் மனம் ஆறவில்லை..
            அந்த வீதியின் கற்களெல்லாம் அவளை இடித்து இடித்து
            சொல்லவேண்டாமா..  அவள் கால்தடங்களை காவல் புரியும்
            ஒருவன் இன்று இந்த வீதியில் இல்லை என்பதை...

            அந்த வீதியின் மரங்களெல்லாம் மலர் உதிர்த்து
            சொல்ல வேண்டாமா அந்தச்சாலையின் உயிர்களில்
            ஒன்று தொலைந்து போய்விட்டதை...      
அந்தக்கூடுகளின் பறவைகளெல்லாம் கத்திக்கத்தி            
பேச வேண்டாமா அந்தச்சாலையின் உயிர்களில் ஒன்று
தொலைந்து போய்விட்டதை...
 அந்த மேகங்களெல்லாம் கண்ணீர்விட்டுக் கதறியழவேண்டாமா            
அவளுக்காகவே தங்களை நேசித்த ஒருவன் இழக்கப்பட்டுவிட்டதை உணர்த்த...

இந்த சூரியன் முகம் கறுத்து வெம்பவேண்டாமா
அந்த தாரகையின் பொலிவில் தன்ஒளி மங்கிவிடாது
தடுத்து அவளின் ஆகர்ஷகிரணங்களை முழுமையாக
உள்வாங்கிக் கொண்டவன் இன்று இல்லை என்று எண்ணி...

இந்தத் தென்றலில் குளிர்மை அவளுக்கு குத்திக் குத்தி
உணர்த்த வேண்டாமா அவள் மீது இதுநாள் வரை
வெம்மையைப் பாய்ச்சிய பார்வை இழக்கப் பட்டுவிட்டதை...

எவருமே தங்கள் வேலையைச் செய்யவில்லையா?

நான் விளையாடத் தொடங்கும்போது மாத்திரம் ஏன்
ஏன் கால்களே என்னை இடறிவிடுகின்றன...

எந்த வித பிரதிபலிப்போ முக மாறுதலோ இன்றி அவள் அந்த
வீதியை கடந்து செல்கிறாள்
வறண்ட காலத்தில் தன்னைக் கடந்து செல்லும் மழை மேகங்களை
ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் பாலைவனத்தைப் போலே
நான் அவளை நோக்கிய படி...

-தொடரும்...

புதன், 15 செப்டம்பர், 2010

விளையாட்டும் வினைகளும்

வாழ்க்கை மனிதனுக்கு நிறைய பாடம் கற்பித்து வந்திருக்கிறது. அதனால் தான் மனிதன் வாழ்கையை இவ்வளவு தூரம் வாழவும் முடிகிறது. நெருப்பிலே கைவிட்ட மனிதர்களின் துணிவு அவர்களுக்கு பாடம் கற்பித்தது. அது பின்னாளில் நெருப்பு சுடும் என அறிந்து வாழும் தலைமுறையை படைத்தது. கடந்த தலைமுறை விட்டுச்சென்ற அனுபவங்கள்தான் நாங்கள் இன்று வாழும் வாழ்க்கை. 
ஆனால் எல்லா விடயங்களும் இப்படி நடந்திருக்கிறதா என்று பார்த்தால். சிலவிடயங்கள் எதிர்மறையான வழியிலும் சென்றுகொண்டிருக்கின்றன. அதிலே ஒரு விடயத்தைப் பற்றிதான் இங்கே சொல்ல விரும்புகிறேன். நான் இதுவரை எண்ணற்ற மரணங்களைப் பார்த்து இருக்கிறேன், கேட்டு இருக்கிறேன். அவற்றிலே ஒரு சில என்னை மிக ஆழமாகப் பாதித்து இருக்கின்றன. அதிலே இரண்டு மரணங்களை என்னுடைய சிறுகதைகள் வாயிலாகவும் வெளிப்படுத்தி இருக்கிறேன். நேரம் கிடைத்தால் அவற்றையும் பதிவிடுகிறேன். 
இது நேற்றுமுன்தினம் நிகழ்ந்த என்னுடைய நண்பி ஒருவரின் தம்பியின் மறைவை ஒட்டி எழுதப்பட்டாலும் ஒரே முறையில் என்னைப் பாதித்த மரணங்களின் தொடர்ச்சியாகவே இதனை பதிவிடுகிறேன். கடலில் குளிக்கச் சென்ற அந்த பதினேழு வயது மாணவன் கடலுடன் போய் விட்டான். இவ்வளவுக்கும் கடல் அவனுக்கு புதிதில்லை. அவன் பிறந்ததிலிருந்தே கடலின் அருகாமை அவனுக்கு வைத்து இருந்தது. தெரிந்தும் தெரியாமலும் ஒழித்தும் கடலில் விளையாடி வளர்ந்த பையன்தான். எனவே கடலுடன் அவன் போனது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.
இது முதலாவது சம்பவம் அல்ல. 2008ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரன் இளஞ்சேய் நெளுக்குளத்தில் நீந்தப்போய் நீருக்குள் மாண்டு போனான். அவனுக்கும் இதே கதைதான் பிறந்ததில் இருந்தே அவனது வீட்டுக்கு பின்னால் குளம் அதன் ஓரத்தில் எத்தனையோ நாள் நடந்து திறந்திருந்த அவனுக்கு அன்றுதான் இறங்கிப் பார்க்கத் தோன்றியிருக்கின்றது. அதுவும் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாத வேளையில். பதினைந்து வயதில் அவனது அத்தனை திறமைகளும் அவனுடனே சேர்ந்து நீருக்குள் மூழ்கிப் போய்விட்டது. அதிலிருந்து எங்கே யார் மூழ்கிப் போன செய்தி கேட்டாலும் மனதுக்குள் அவன் வந்து நிறைந்துவிடுவான். இன்றுபோல...
இதற்கு யாரைக் குறை சொல்லுவது என்று புரியவில்லை.
அத்தனை வயது வந்தவர்களுக்கு புரிய வேண்டாமா எது ஆபத்து என ?
அடுத்தது சமுதாய மாறல். எங்களது சமுதாயம் பின் புறமாக நடக்கிறது. எங்களது பெற்றோரின் தலைமுறையில் பெரும்பாலும் அனைவருக்கும் நீச்சல் தெரிந்து இருந்தது. சும்மா இருந்த குளங்களில் சிறு வயதிலேயே கொஞ்சம் கொஞ்சமாக நீச்சல் பழகியவர்கள் அவர்கள். பிறகு மேலைத்தேய கல்வி முறைமைக்கு அரைகுறையாக ஆட்பட்டு முழு நேரமும் பாடப்புத்தகங்களுக்குள் தொலைக்கப்பட்ட பிறகு. அவர்களது நேரம் அதற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லை. நீச்சல் தெரியாத தலைமுறை ஒன்று கட்டி எழுப்பப் பட்டது. இன்று பின்னவீனத்துவம் நோக்கியும் நாகரிகம் எனும் பெயரிலும் சின்னக்குழந்தைகள் நீச்சல் குளங்களுக்குள் நீச்சல் பழகுகிறார்கள். எங்களிடம் இயல்பாக இருந்த பழக்கம் கூட மேலைதேயத்தவர் சொல்லும் வரை கடைப்பிடிக்கப் படாமல் இருந்த கேவலத்தை வேறு எங்கும் காண முடியாது. 
கடலுக்கு அருகில் குளத்துக்கு அருகில் வாழ்ந்தவர்கள் கொஞ்சம் நீச்சல் பழகி இருந்தாலும் அவர்கள் இன்று வாழ்ந்து கொண்டு இருந்து இருக்கலாம். இதற்கு மேல் இதைதொடரக்கூடிய மனநிலையில் இன்று இல்லாததால்....

தொடரும்...

மதுரகன்




 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...