ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

என்னை விட்டுடுங்கப்பா நான் ஒரு Srilanka Supporter

ஒரு இந்தியா டீமை சப்போர்ட் பண்ணிக்கொண்டு நான் படுற பாடு இருக்கே ஐயோ ஐயோ... என்ன கொடுமை இது எண்டுதான் கேக்க நினைக்கிறன்... பங்களாதேஷ் போட்டிக்கு முதல் ஒருத்தன் சொல்லுறான் இண்டைக்கு இந்தியா தோத்தா சுப்பர் மச்சான் எண்டு.. என்னடா இது இண்டைக்கு இந்தியா இருக்கிற நிலைல இப்பிடி சொல்றியே, பங்களாதேஷ் இட்ட தோக்குற மாதிரியா நிலைமை இருக்கு எண்டு கேட்டா... பிறகு வந்து அவங்களே சொல்றான்கள். பங்களாதேசை வெண்டா அது பெரிய விசயமா செத்த பாம்பை அடிச்சிட்டு இப்பிடி துள்ளாதை எண்டு..
இதிலை குறிப்பிட வேண்டிய விஷயம் 
ஒண்டு - பங்களாதேஷை வென்றதை பெரிய விசயமாக்கினது நான் இல்லை, அதுக்கு முதலே பங்களாதேஷ் வெல்லும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவங்கள். 
ரெண்டு - அப்பிடி வேண்ட பிறகு நான் எந்த வித கொண்டாட்டங்களிலும் ஈடுபடவில்லை... 
மூன்று - செத்த பாம்பு செத்த பாம்பு எண்டு சொல்றீங்களே அது செத்த பாம்பு எண்டு முதலே தெரிஞ்சும் எப்பிடி அது வெல்லும் என்று ஒரு கருத்தை சொன்னீங்கள்... ஆக பங்களாதேஷ் வெல்ல வேணும் எண்டு ஒரு நப்பாசை வேற அதுக்குள்ளே இந்தியா வென்றிட்டா செத்த பாம்பை அடிக்கிறாங்கள் என்று கூக்குரல்.. 

இதுக்குள்ளே இவங்கள் ஏதோ பெரிய பங்களாதேஷ் விசிறிகளோ பரம ரசிகர்களோ என்று பார்த்தா இல்லை... எல்லாம் சும்மா.. இண்டைக்கு பங்களாதேஷோட போட்டி எண்டதும் நான் பாக்க கூட போகேல.. இடைல எங்கயோ டிவி ரூம் பக்கம் போன பெரிய கூச்சல் கொண்டாட்டம்... இலங்கை போட்டி ஏதோ நடக்கு வடிவா போட்டி அட்டவணைய பார்க்காம விட்டிட்டன் என்று நினைச்சுக்கொண்டு கிட்ட போனாத்தான் அவங்கள் என் அவ்வளவு கூச்சல் போட்டாங்கள் எண்டு விளங்கிச்சு... சேவாக் 200 அடிக்காம அவுட் ஆகிட்டாராம். என்ன ஒரு அக்கறை... இதைத்தான் வக்கிரத்தின் உச்சம் என்பது. ஒரு Gentleman விளையாட்டை இவங்கள் போட்டு படுத்தும் பாடு.. 

சரி இலங்கைக்கு எதிரா விளையாடும் போது கொண்டாடட்டும்... ஆனா கென்யா கனடாக்கு எதிரா விளையாடும் போது கூட இந்தியா தோற்க ஆசைப்படுவது கேவலம் என்றுதான் சொல்ல தோன்றுது.. உனக்கெதுக்கு இந்தியா அணியில அவ்வளவு அக்கறை என்று யாரோ கேக்குறது விளங்குது கொஞ்சம் பொறுங்கோ எல்லாத்துக்கும் பதில் இருக்கு...
இதில சில பேர் வந்து இலங்கைல பிறந்திட்டு இந்தியாக்கு போய் ஆதரவு குடுக்கிறியே என்று ஆதங்கம்.. ஏதோ அவர் ஆதரவால்தான் போன உலகக்கிண்ணம் இறுதிவரை இலங்கை வந்தது மாதிரியும்.. நான் ஒருவன் அந்நிய அணிக்கு ஆதரவளித்த பாவத்தால் இறுதியில் தோற்றது மாதிரியும்..
அவங்களுக்காக இவ்வளவு துள்ளுறாய் அவங்கள் உன்னை என்னை தலையிலயா தூக்கி வச்சுகொண்டு ஆடுறாங்கள் என்று கேக்கும் சில பேர்.. என்னுடைய குறைந்த பட்ச ஆதரவுக்கே தலை மேல் தூக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நண்பர்களே... அப்படி என்றால் உங்கள் வெறித்தனமான ஆதரவுக்கு உங்களை இலங்கை அணி விளம்பரத்தூதராக அல்லவா நியமிக்க வேண்டும்.. குறைந்த பட்சம் என்ன கிடைத்தது உங்களுக்கு...
இதுக்குள்ள கிரிக்கெட் அணிக்கு ஆதரவு அளித்து தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த போவதாக சிலர்... இவர்களை எல்லாம் பார்க்கும் போது சிரிப்புத்தான் வரும்.... இலங்கையோ இந்தியாவோ.. தேசியக்கொடியின் பொருண்மை விளங்காமல் அதை ஏதோ தலைக்குமேல் சுழற்றும் வர்ணத்துண்டாக கருதிகொண்டதும்.. வெறும் தேசியக்கொடியை சுழற்றுவது தேசப்பற்று என நினைப்பதும்... வெறும் கிரிக்கெட்டுக்குள் தேசப்பற்றை அடக்கி என்ன சாதிக்கப்போகிறீர்கள்...
இன்னும் என்ன என்னவோ கேட்க நினைத்தாலும் மறந்து விட்டது,,,
இந்த ஆதரவு அரசியலால் மோசமாக பாதிக்கப்பட்டவன் நான்.. வெளிப்படையாக இந்திய அணியை ரசிப்பதால் தீவிரவாதி, தேசத்துரோகி என பெரும்பான்மை நண்பர்கள் சிலரால் விளிக்கப்பட்டவன்..
ஆனால் இது ஒரு பொழுதுபோக்கு என்று பலர் எண்ண மறுப்பது ஏன்.. ஒருவனுக்கு பாட்டு கேட்பது பொழுதுபோக்கு மற்றவனுக்கு பாட்டு அறவே பிடிக்காது என்றால் பாட்டை கேள் என்று அவனை கட்டாயப்படுத்துவீர்களா... அது போலத்தான் எனக்கும் இருக்கிறது ஒரு அணியை ஆதரவு செய் என்று கட்டாயப்படுத்துவது..





சரி சின்னவயதில் கிரிக்கெட் பார்க்க ஆரம்பிக்கும் போது இப்படி அணிகள் இருக்கும் என்றோ அதற்கு ஆதரவு அளிப்பதால் பல கருமங்கள் நேரும் என்றோ யாராவது உணர்வார்களா.. சின்ன வயது கிரிக்கெட் அனுபவம் தனிப்பட்ட நபர்களைப்பார்ப்பதால் கட்டியெழுப்பப்படுகிறது.. எனக்கு அது சச்சின்.. சச்சின் விளையாடாமல் போட்டிகளை நான் பார்ப்பதில்லை... சச்சின் ஓய்வுக்கு பின்னர் கிரிக்கெட் பார்ப்பேனா என்றே எனக்கு சந்தேகம்.. எனக்கு கிரிக்கெட் என்றால் சச்சின்தான்.. அதன் படி இரு விடயங்கள் இந்திய அணி தோற்றால் அல்லது சச்சின் ஓட்டமெடுக்காமல் ஆட்டமிலந்தால் தயவு செய்து ஏதோ நான்தான் பயிற்சியாளர் போல என்னிடம் கேள்வி கேட்கவேண்டாம்.. உண்மையான ரசிகன் கவலைப்படுவான்.. என்னை மாதிரி ரசிகன் தோற்கும் போதும் தனக்கு பிடித்த அணியை ரசிப்பான்.. விஜய் படம் சொதப்பலா வந்தாலும் விஜய் ரசிகனுக்கு அது திருவிழாதான்.. அடுத்த விடயம் கடந்த வருடத்தில் எனது வாழ்நாள் கனவுகளில் இரண்டு நிறைவேறின அதில் ஒன்று சச்சினை நேரில் கண்டு கை குலுக்கியது.. வேறு எங்கும் இல்லை பி.சரவணமுத்து மைதானத்தில்..

இதற்கும் மேல் உங்கள் கேவல வக்கிர அரசியலை எனது பொழுதுபோக்கிற்குள் புகுத்தினால்... நான் ஒரு இலங்கை ஆதரவாளன்தான் ஆளை விடுங்கப்பா.. என்று கூறிக்கொண்டு ஒதுங்கி விடுவேன்... ஏனென்றால் பொழுதுபோக்கே ஒரு ஆளுக்கு தலையிடியா வந்திடக்கூடாது..

அன்புடன்
மதுரகன்

பி.கு - இதைத் தொடர்பதிவாக தொடர விரும்பும் நண்பர்கள் தொடரலாம் நான் யாரையும் குறிப்பிட்டு அழைக்கவில்லை.. ஆனால் எனக்குத்தெரியும் என்னைப் போல பலர் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள்..

சனி, 5 பிப்ரவரி, 2011

மரபு வழிப்படா இயல்புகள் 2 - பிரிதலின் பிற்பட்டபெருந்துயர்



எனக்குள் இருக்கும் உயிர்கள் மீண்டுமொருமுறை கூவிக்கொண்டன...
அடைகாத்தலின் குறைபாடுகளால் 
அவற்றின் குறைப்பிரசவம் நேரிடலாம் 
என்று இடைக்கிடை 
சுகம் விசாரித்தன...

இறக்கைகள் முளைப்பதற்கு முன்னமே 
பறந்து போய்விட்ட குயிலொன்று 
இன்னமும் என்னைப் பார்க்க வருகிறதா 
எனக் குறைகேட்டன...

நானும் குயிலின் நாதம் என்னைப் 
பாதிக்கவில்லையெனப் பதிலளித்தேன்

ஆனால் குயில் இடைக்கிடை என்னைப் பார்த்துக் கூவிச்சென்றது... 
நான் அதற்குத் தலையசைக்கவில்லை
சில வேளைகளில் 
மரத்தில் குந்தியிருந்து கொத்திப் போனதும் 
கிளைகளில் எச்சமிட்டும் 
அது நடந்துகொண்டது...
நான் சட்டை செய்யவில்லை..

என் கவனங்கள் 
கூட்டுக்குளிருக்கும் முட்டைகளைப் பாதுகாப்பதில், 
குறிப்பாக இந்தக்குயிலின் சங்கீதம் 
அவற்றை எட்டாமல் 
காதுகளைப் பொத்திகொண்டேன்...
அருகில் வரும் நேரங்களில் 
கண்ணைப் பொத்திக்கொண்டேன்....

காலத்துடன் குயில் 
கூவுவதை மறந்து போனது
அருகாமையில் கடந்தாலும் அசைவுகள் ஏற்படுத்தவில்லை
ஆனால் அடிக்கடி கிடைக்கும் செய்திகள் 
உவப்புடையவையாக இருக்கவில்லை

என்னைத் துஷ்டனைப்போல பாவனை காட்டுவதாய், 
எனதருகில் செல்ல அஞ்சுவது போலும், 
நான் திருடி வந்து முட்டைகளை அடைகாப்பதைப்போலும்
பல்வேறு பாவங்கள்...
அன்றொரு நாள் 
அயல் மரக்கிளையில் என்னைப் பார்த்து இருந்தபோது, 
ஆதிகாலத்தில் அடைக்காக்கும்போது நான் பாடிய ராகத்தின் பாடலொன்றை இசைக்க முயன்றேன்..
ஆனாலும் நிலைமையுணர்ந்து 
சம்பிரதாயக் கச்சேரி ஒன்றுக்கு 
முகஸ்துதி பாடினேன்...

காலங்களாய்ப் பூட்டப்பட்டிருந்த வாய்திறந்து
குயில் என் மீது 
நீண்ட குற்றப்பத்திரிகை ஒன்று படித்தது..
தனது அடைகாப்புப்பற்றி 
நான் அர்த்தமின்றி உளறுவதாய்..
மேலும் பழமை நினைவில் உள்ளதன் கெடுதியைப்பற்றி
நீண்ட அறிவுரை கூறிப் பின்னர் 
தன்னை அடைகாத்த தடயங்களை எரிக்கச்சொன்னது...  

நான் கூறினேன், அதற்குக் கூட்டை எரிக்கவேண்டும்...
அதன் நிலைப்பாடு உறுதியாயிருந்தது..
நான் கூட்டிலுள்ள ஏனைய முட்டைகளின் 
எதிர்காலத்தைச் சுட்டிக்காட்டினேன்...
வேண்டுமானால் நான் தற்கொலை செய்வேன் 
என வழியுரைத்தேன்

குயில் பறந்துவந்து கூட்டைக்கொத்த முயன்றது..
நான் என் இறக்கைகளை விரித்துத்தாங்கினேன், 
முட்டைகளைப் பற்றிக்கொண்டேன்,
கூட்டினுள் முகம் புதைத்து அழுந்தினேன்..

வர வர இறக்கையிலும் முதுகிலும் விழும் கொத்து 
வேகமும் வீச்சும் கூடியிருந்தது உணர்ந்து திரும்பினேன், 
குயில் ஒரு மரங்கொத்தியாக மாறியிருந்தது...

நான் முட்டைகளையும் கூட்டினையும் தூக்கிக்கொண்டு 
அந்தக்குயில்/மரங்கொத்தி கனவிலும் அணுகமுடியாத 
தேசம் நோக்கிப்பயணிக்கிறேன்...


இவை புரிந்துகொள்ளலுக்கும் பிரிதலில் புரிந்து செல்வதற்கும் இடைப்பட்ட முரண்பாடுகளின் மனப்போராட்டங்கள்...

அன்புடன்,
மதுரகன்
 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...