ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

எனது வாசிப்புலகம் 3 - பாடசாலைக்காலம் (மரபிலக்கியங்கள்)

இரண்டு பாகங்கள் எழுதி ஒரு வாரத்திற்குப் பின்னர் மூன்றாவது பாகத்தை எழுதுகிறேன். இடை நடுவில் பார்த்த மங்காத்தா படத்தின் விமர்சனத்தை எழுதவேண்டும் என்ற ஆர்வம் பிறந்தாலும் அதை இன்னும் ஒரு வாரம் தாமதித்து எழுதலாம் என நினைக்கிறேன். இது வரை என்னுடைய பதினைந்து வயதின் நடுப்பகுதி வரை அதாவது 2002 இன் நடுப்பகுதி வரையான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டேன். ஆனால் அந்த 2002 இன் நடுப்பகுதி வாழ்வில் எனக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 

அது வரை கல்வி சாரா செயற்பாடுகள் என்றால் ஒதுங்கி நிற்கும் நான் ஏதோ ஒரு ஆரவத்திலும் நண்பர்கள் கொடுத்த உசாரிலும் நான் ஜனுதர்சன், ரமேஷ் என மூன்று பேர் பாடசாலை விவாத அணியின் தெரிவில் கலந்துகொண்டோம். அதற்கு முன் ஒரு நிகழ்வில் பேச முயன்றதாக நினைவு ஆனால் பாடசாலை அளவில் கலந்து கொண்டது அதுதான் முதல்முறை. அந்த தெரிவு நிகழ்வும் அதனை நடாத்திய அப்போதைய எங்கள் பகுதித்தலைவர் கலாநிதி. தமிழ்மணி. அகளங்கன் அவர்களும்தான் என்னை ஒரு சரியான பாதை நோக்கி நெறிப்படுத்தியது.

அதற்கு முன் ஒரு மேடை கூட ஏறிப்பழக்கமில்லாத என்னை நூற்றுக்கணக்கான மேடைகள் ஏற வைத்ததும் அவரது வழிகாட்டல்தான். அவரைப் பற்றி பெரிதாக அறிமுகம் தேவை இல்லை முப்பதுக்கு மேற்பட்ட புத்தகங்கள் எழுதிய அவர் சமீபத்தில் கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்து இருக்கலாம். 
கலாநிதி அகளங்கன்
அந்தத் தெரிவுப்போட்டியில் ஒரு முன்னனுபவமோ பெரிதான விடயஅறிவோ இல்லாத என்னை அவர் கூறிய வார்த்தைகள் உற்சாகப்படுத்தியது. "உன்னுடைய ஆர்வத்தாலதான் உன்னை எடுத்து இருக்கிறேன், இந்த வருசம் நீ பேசவேண்டாம் ஆனா எங்களோட பயிற்சிக்கு வா பேசிப்பழகு அடுத்தவருசம் நல்ல அணி ஒண்டு உனக்கு அமையும்" அவர் கூறியது மட்டுமன்றி ஒரு மூன்று மாத காலம் கிட்டதட்ட வார நாட்களில் ஒவ்வொரு நாளும் குறித்தளவு நேரம் எங்களுடன் செலவிட்டு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தலைப்பில் பேசியபின்னர் எங்கள் குறை நிறைகளைக் கூறி பின்னர் அந்தத்தலைப்பில் அவரது கருத்துக்கள் கடல் போல விரியும். அது வரை கேட்டுக்கொண்டிருந்த நான் அவர் கூறும் கருத்துக்களை ஒரு நாட்குறிப்பில் பதிவு செய்து கொள்வேன், கருத்துக்கள், செய்யுள்கள், விளக்கங்கள் என.

என்னிடம் தற்போது இருக்கிற விடயஅறிவில் நூலகங்களிடம் இருந்து பெற்றுக்கொண்டதை விட அதிகம் சொல்லிக்கொடுத்தது இருவர். ஒருவர் தமிழ்மணி அகளங்கன் ஆசிரியர், அடுத்தவர் திரு. கதிர்காமசேகரன் ஆசிரியர். கதிர் சேர் என மாணவர்கள் பலராலும் அழைக்கபட்ட அவர் பெரும்பாலான மாணவர்களின் அபிமானம் பெற்ற ஒரு ஆசிரியர். வகுப்பறைக் கற்பித்தலிலும், மேடைப்பேச்சிலும் தனக்கான தனிப்பாணி கொண்ட அவருக்கு ஆசிரியர், மாணவர்களிலேயே பல ரசிகர்கள் இருந்தனர். இருவரும் இணைந்து கொண்டு சில விடயங்கள் கதைப்பதை நேரம் போவது தெரியாமல் கேட்டுக்கொண்டுஇருந்தே நாங்கள் அறிந்த விடயங்கள் ஏராளம்.

தொடர்ந்து கதிர்காமசேகரன் ஆசிரியர் வீட்டிலும் மாலை நேரங்களில் பயிற்சிகள் தொடர்ந்தது. நேரம் தெரியாது அவர் கூறும் விடயங்களைக் கேட்ட படியே நாட்கள் ஓடியிருக்கின்றன. அங்குதான் பல நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. சிறு வயதில் நான் பேசப் பழக ஆரம்பிக்கும் முன்னரே என்னைக்கவர்ந்த எமது பாடசாலை மாணவர்கள் இருவர் ஒருவர் கார்த்திகேயன் அண்ணா, அவரைப் பார்த்தது மட்டும்தான் மற்றவர் கோகுலதாசன் அண்ணா,. கோகுலதாசன் அண்ணாவின் அறிமுகம் கிடைத்ததும் அடுத்த வருடத்தில் அவரின் தலைமையிலான விவாத அணியில் நான் ஜனுதர்சன், ரமேஸ் ஆகியோர் இடம்பிடித்ததும் என எங்களின் வாழ்க்கைத் தடங்களில் பலவற்றைத் தொட்டுச்செல்வது கதிர் சேர் வீட்டு முற்றமும் அவரின் வரவேற்பரையும்தான். கதிர் சேர் தான் பங்கேற்ற பட்டி மன்றங்கள், கம்பன் கழக நிகழ்வுகள் என பலவற்றின் வீடியோக்களைப் போட்டுக்காட்டிக் கதைப்பார். அதை விட கம்பன் கழகம் பற்றிய அழிக்கமுடியாத எண்ணக்கருவை விதைத்ததும் அவர்தான். 

எனது வாசிப்புலகத்தில் இவர்களைப் பற்றி கூறுவதற்குக்காரணம் இவர்கள் இருவரிடமும் கற்றது எந்த நூல் நிலையத்திலும் வாசித்ததை விட அதிகம் அடுத்தது எனது வாசிப்புப்பழக்கத்தையும் மெருகேற்றியவர்கள் இவர்கள். இந்த பேச்சு, பட்டிமன்ற அறிமுகத்தாலும் இவர்கள் மூலம் கிடைத்த இலக்கியப் பரிச்சயத்தாலும் எனது வாசிப்பு இன்னும் கொஞ்சம் அகலமானது ஆரம்பத்தில் பாரதியார் கவிதை, பாரதிதாசன் கண்ணதாசன் என தொட்டுத் தொட்டு சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி என மரபிலக்கியங்களையும் தொட்டுக்கொண்டேன்.
பெரும்பாலான எல்லா மரபிலக்கியங்களின் கதையுருவில் அமைந்த பாதிப்புக்களையும் முதலில் வாசித்தேன் பின்னர் இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளை வாசிக்க ஆரம்பித்தேன். அகளங்கன் ஆசிரியரின் வாலி, பாரதப்போரில் மீறல்கள் போன்ற புத்தகங்கள் இலக்கியங்களின் இனிமையை உணர்த்துவதை இருந்தது. ஒவ்வொரு நிகழ்விற்கும் வேறு பட்ட தலைப்பில் பட்டிமன்றம் அமைப்பதும் அதற்காக அது தொடர்பான நூல்களைத்தேடுவதும் புத்தகங்களுக்குள் என்னைப் புதைத்துவிட்டது. எங்களுடைய நோக்கம் எல்லாம், எல்லாவற்றிலும் கொஞ்சமாவது அறிந்திருத்தல் என்னும் நோக்கில் இயங்கியது (Something in Every thing).
அந்தத் தேடல் பிற்காலத்தில் பாடசாலையில் அவசரமாக ஒரு மாணவர் பேசவேண்டிய சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் அந்த வாய்ப்பை எனக்கே பெற்றுக்கொடுத்தது. 2001ம் ஆண்டில் தற்செயலாக கிடைத்த சந்தர்ப்பத்தால் பேசச்சென்று நாத்தழு தழுத்து பேச முடியாமல் இறங்கிய எனக்கு பாடசாலை விட்டு விலகும் வரை போதும் அதே இடத்தில் போதும் என்னும் வரை வாய்ப்புக்கொடுத்தது. மாவட்ட, மாகாண, தேசிய அளவுகளில் எமது விவாத அணி பல வெற்றிகளைப் பெறுவதற்கு காரணமாக இருந்தது என்னைப் பொறுத்தவரையில் கலாநிதி. அகளங்கன் ஆசிரியர் மற்றும் கதிர் ஆசிரியர் ஆகியோரின் வழிகாட்டலும், எம்மைத்தொடர்ந்த வாசிப்புப் பழக்கமும்தான். உயர்தர வகுப்புக்கள் ஆரம்பித்ததும் எனது வாசிப்புப் பழக்கம் இன்னும் கொஞ்சம் மாற்றமடைந்தது அதற்கு நண்பன் ஒருவனின் பாதிப்பும் காரணம்.

தொடரும்...

அன்புடன்,
மதுரகன்

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...