வியாழன், 9 ஜனவரி, 2014

தமிழ் மாமன்றம் தோற்றமும் தொடர்ச்சியும்... - எனது அனுபவங்கள் 1

Posted on PM 6:31 by செல்வராஜா மதுரகன்


எம்மில் பலருக்கு ஆயுட்காலக் கனவுகளில் ஒன்றாக இருந்த தமிழ் மாமன்றம் தோற்றம் பெற்று இன்று சிறப்பாகச் செயற்பட்டவண்ணம் உள்ளது. தமிழ் மாமன்றம் எதற்காக உருவானது, எப்படி உருவாக்கப்பட்டது, என்ன செய்ய நினைக்கிறது, என்ன செய்துகொண்டு இருக்கிறது என்ற பல கேள்விகள் இன்றுவரை பல நண்பர்களிடம் இருந்து வந்த வண்ணமே இருப்பினும் சிலருக்கு மட்டுமே நேரில் பதிலளிக்க முடிந்தது. இருளைப்படைத்தல் கவிதை நூல் வெளியீட்டு விழா தமிழ் மாமன்றம் பற்றிய அழுத்தமான பதிவை வவுனியாச் சமூகத்தின் மனதில் ஏற்படுத்தியுள்ளதோடு. கம்பவாரிதி ஜெயராஜ் ஐயா, கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன் அண்ணா உட்பட்ட கம்பன் கழகத்தினரிடமும் தென்மராட்சி இலக்கிய அணியினரிடமும் எம்மைப் பற்றிய நல்லெண்ணத்தையும் உருவாக்கியுள்ளது. இருப்பினும் இணையம்மூலம் எம்முடன் இணைந்து இருப்பவர்களுக்கும் புதியவர்களுக்கும் எம்மைப் பற்றிய ஒரு தெளிவுபடுத்தலை மேற்கொள்ள நீண்டநாளாய் நினைத்து இருந்தேன். நேரம் இன்றைக்கு என்னை எழுத வைக்கிறது. 
(இதன் முதல் பகுதி எனது தமிழ் மாமன்றத்தின் தோற்றத்துடன் தொடர்புபட்ட எனது அனுபவங்களைக் கூறுகிறது. இதன் மூலம் தமிழ் மாமன்றத்தை நான் மட்டுமே தோற்றுவித்ததாக தயவு செய்து பொருள் கொள்ளவேண்டாம். என்னைப் போன்ற ஒத்த சிந்தனையுடன் ஒரே காலப்பகுதியில் ஒன்று சேர்ந்த நண்பர்கள் அனைவரினதும் கூட்டு முயற்சியே இதற்குக் காரணம்.)


முற்றுமுழுதாக இளைஞர்களைக் கொண்ட சரியான சமுதாயக்கண்ணோட்டம் கொண்ட அமைப்பொன்றை நிறுவ வேண்டும் என்ற ஆசை பல்கலைக்கழகம் புகுந்த நாளில் இருந்தே எனக்கு இருந்தது. இதனுடைய சாத்தியப்பாடுகள் பற்றி எனது நண்பர்களுடன் பலமுறை பேசியிருக்கிறேன். சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்ற விளங்காத கனவு அந்த வயதில் ஏற்படுவது சாதாரணம்தான் என்றாலும் குறைந்தது அப்படி ஒரு அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு சிறந்த ஒரு செயற்பாட்டுத்தளத்தையும் வழிகாட்டலையும் வழங்க முனைந்தால் அது அந்த இளைஞர்களை கட்டாயம் செப்பனிடும். நீண்டகால நோக்கில் அந்த செப்பனிடல் ஏதும் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பது அங்கு காணப்படும் சிறிய நப்பாசை. 

இந்த ஆசை இப்படியே இருக்க எனது ஆறு வருடப் பல்கலைக்கழக வாழ்க்கையில் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பல்வகை அனுபவங்கள் கிட்டின. மருத்துவ பீடத்தில் கிடைத்த அனுபவம் ஒருவகையில் முக்கியமானது. நேரடியாக சிங்கள நண்பர்களுடன் பழகுவதற்கும், கருத்துக்களைப் பரிமாறவும் முக்கியமாக நேரடியாக முரண்படவும் அது களம் தந்தது. அதே போலவே பல்கலைக்கழக மட்டத்தில் இந்து மாமன்றத்தின் உறுப்பினராகவும் பின்பு தலைவனாகவும் வேறுபட்ட பீடங்களைச் சேர்ந்த பல நண்பர்களுடன் பழக வாய்ப்புக்கிட்டியது. கொழும்புப் பல்கலைக்கழக இந்து மாமன்றத்தின் தலைவனாக ஒரு வருடம் செயற்பட்டது, ஒரு தலைவன் எப்படிச் செயற்படக்கூடாது என்ற அனுபவத்தை எனக்கு ஊட்டியது. 

சமகாலத்தில் கொழும்பில் செயற்படும் பல அமைப்புக்களுடன் பழக வாய்ப்புக்கிட்டியது. கொழும்புத் தமிழ்ச் சங்க நூலக உறுப்புரிமை பெற்று அங்கு அடிக்கடி போய் வந்தமை தமிழ்ச் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் நான் பங்குபெற வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தது. அதே சமயத்தில் பல்கலைக்கழக நண்பர்கள்மூலமும் இணையம் மூலமும் சமூக விஞ்ஞான கற்கைகள் வட்டத்தின் நண்பர்கள் பலரது அறிமுகம் கிட்டியது. தொடர்ந்து 2011ம் ஆண்டு நடைபெற்ற உலக எழுத்தாளர் மாநாட்டில் பங்கேற்றமை மேலும் பல அறிமுகங்களையும் அனுபவங்களையும் ஊட்டியது. குறிப்பாக பேராசிரியர். கா. சிவத்தம்பி அவர்களது அறிமுகம் எழுத்தாளர் கனடா மூர்த்தி அண்ணா மூலம் கிட்டியது. அவரது அறிமுகம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரது வீடு செல்லவும் பல மணி நேரம் உரையாடவும் வாய்ப்பு உருவாக்கித் தந்தது. அவர் சுகவீனமுற்று மறையும் வரை உரையாடல்களும் தொடர்ந்தன. 

இப்படிக் காற்றில் அலையும் இறகாக அலைந்து கொண்டிருந்த என்னை ஓரிடத்தில் கட்டிப்போட்டது கம்பன் கழகத்துடனான உறவு. 2008ம் ஆண்டு கம்பன் விழாவினை எமது பீட அண்ணன்மார் வாகீஸ்வரன், ராகவன் ஆகியோருடன் சென்று கடைசி வரிசையில் அமர்ந்து ரசித்துவிட்டு வந்தேன். பின்பொருநாள் வெள்ளவத்தை வீதியில் ஜெயராஜ் ஐயா நடந்து போவதைக் கண்டு அவருடன் பேச விரும்பி அருகில் சென்று தயக்கத்திலே திரும்பிவிட்டேன்.அதற்கு நீண்டநாட்களுக்குப் பிறகு ஜெயராஜ் ஐயா அவர்களின் திருக்குறள் தொடர் சொற்பொழிவு ஒன்றினை தமிழ்ச் சங்கத்திலே கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தத் தமிழினால் ஈர்க்கப்பட்டு நண்பன் தனேசன் உதவியுடன் ஜெயராஜ் ஐயாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன் சில நிமிட உரையாடலின் பின் அவரின் திருக்குறள் வகுப்பில் மாணவனாக இணைந்துகொண்டேன். 

மருத்துவபீட கல்விச்சுமையால் திருக்குறள் வகுப்பை அப்போதைக்கு இடை நிறுத்தினாலும் 2011 கம்பன் விழாவிலே என்னை மீறிய ஒரு சக்தி அல்லது ஒரு உணர்வு கம்பன் கழகத்தில் ஒருவனாக கட்டிப்போட்டது. ஒரு விழா எப்படி நடத்தப்படவேண்டும் என்பதை அருகிருந்தே பார்க்கவும் விழாவை ரசிக்கவும் கம்பன் கழகக் குடும்பத்தில் ஒருவனாகப் பழகவும் வாய்ப்புக்கிடைத்தது. கூடவே தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் கலந்து கொள்ளும் வழக்கறிஞர் ராமலிங்கம் ஐயா அவர்களின் அன்பும் கிட்டியது. இலக்கியம் மட்டும் என்று இல்லாமல் தலைத்துவம், ஒழுங்கமைப்பு, பொறுமை என்று எத்தனையோ மனிதப்பண்புகளை எனக்குப் போதித்து கம்பன் கழகம் எனக்குள்ளே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வைத்தது. 

இந்த வரம் எனக்கு மட்டும் இன்றி என்னைப்போலவே ஒவ்வொரு முறையும் அன்புடனும் ஆர்வத்துடனும் வந்து இணைந்துகொள்ளும் அனைவருக்கும் தடையின்றிக்கிடைத்தவண்ணமே இருந்தது. இலங்கையில் இன்றைக்குப் புகழ் பெற்றவர்களாக விளங்கும் எத்தனையோ எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள் கம்பன் கழகத்தினால் செதுக்கப்பட்டவர்கள். அது மட்டுமின்றி ஆசிரியர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், வழக்கறிஞர்கள், ஊடகவியலார்கள் முதல் அலுவலக சிப்பந்திகள் வரை அனைத்துவிதமான தொழிற்றுறையில் இருப்பவர்களும். ஜெயராஜ் ஐயாவிடமும் திருக்குறளுடன் சேர்த்து வாழ்வியலையும் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கக்கூடிய சிறந்த மாற்றம் ஒன்று வித்திடப்பட்டுக்கொண்டு இருப்பதை கண்டு உணர்ந்த பின் எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.

ஒவ்வொரு வருடமும் கம்பன் கழகத்தினால் எத்தனை பேர் உருவாகிறார்கள். இது ஏன் இலங்கையின் மற்றைய கலை இலக்கிய அமைப்புக்களால் முடிவதில்லை. அல்லது ஏனையோருக்கு மற்ற ஒருவரை வளர்த்தெடுக்கும் சமுதாயப்பொறுப்பு ஏன் ஏற்படுவதில்லை. எனக்கு கொழும்பு தற்காலிக இடம்தான் எனவே வவுனியாவிலே அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு கலை இலக்கியத்துறையிலே செயற்பாட்டுக்களம் அமைத்துகொடுக்க, கம்பன் காலத்தைப் போல திறந்த மனதுடன் செயற்படும் ஒரு அமைப்பு தேவை என்ற உணர்வு மேலிட்டது. 2013 இலே யாழ்ப்பாணக் கம்பன் விழாவின் வெற்றி கண்டு அடுத்தமுறை வவுனியாவில் ஒரே கம்பன் விழா நடத்துங்களேன் என்று ஜெயராஜ் ஐயாவிடம் கேட்டபோது. சுய நலம் இன்றி தமிழ் என்ற உணர்வுடன் உழைக்கக்கூடிய இளைஞர்கள் பத்துப்பேரைச் சேர்த்துவிட்டு என்னிடம் சொல் என்றார். வவுனியாவிலே இளைஞர்களுக்கான ஒரு இடம் தேவை என்று உறுதிபட என் மனதில் முடிவெடுத்துக்கொண்டேன். ..

தொடரும்...

"தமிழால் வையகத்தலைமை கொள்வோம்"

தமிழ் மாமன்றத்தின் Facebook பக்கம் - https://www.facebook.com/groups/ThamizhMamanram/


1 Response to "தமிழ் மாமன்றம் தோற்றமும் தொடர்ச்சியும்... - எனது அனுபவங்கள் 1"

.
gravatar
கஜன் Says....

'தமிழ் மாமன்றம் தோற்றமும் தொடர்ச்சியும்' எனும் இத் தொடர்ச்சியான பதிவு மிகவும் அவசியாமான ஒன்று. தமிழ் மாமன்றம் என்றால் என்ன? தமிழ் மாமன்றம் எதற்காக ஸ்தாபிக்கப்பட்டது? எச் செயற்றபாடுகளை ஆற்றிக் கொண்டிருக்கின்றது? போன்ற வினாக்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றிற்கான பதிலாக இத் தொடச்ச்சியான பதிவு அமைவது மகிழ்ச்சி. நன்றிகளோடு கூடிய வாழ்த்துக்கள் அண்ணா.

 

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...