சனி, 11 ஜனவரி, 2014

தமிழ் மாமன்றம் தோற்றமும் தொடர்ச்சியும்... - எனது அனுபவங்கள் 2

Posted on PM 6:00 by செல்வராஜா மதுரகன்

இளைஞர்களுக்கு ஒரு இடம் தேவை என்று நான் முடிவெடுக்க என்ன காரணம் என்று சிலர் நினைக்கலாம் ஏனைய இடங்களைப்போலவே வவுனியாவிலும் சில இலக்கிய அமைப்புகள் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றன. அப்படியானால் இளைஞர்கள் அங்கேயே இணைந்து செயற்படலாமே என் தனியாக ஒரு அமைப்பு என்று கேட்கலாம். தனியான ஒரு அமைப்பு என்ற முடிவு ஆரம்பத்திலேயே எடுக்கப்பட்ட முடிவு அல்ல அனைவரும் இணைந்து மேற்கொண்ட முதலாவது சந்திப்பில் ஆலோசித்து  எடுக்கப்பட்ட முடிவு. இது பற்றிப்பின்னர் விரிவாகக் கூறுகின்றேன். ஆனால் இங்கு குறிப்பால் உணர்ந்து கொள்ளப்படவேண்டிய விடயம். ஏற்கனவே அங்கு சில அமைப்புக்கள் செயற்பட்டாலும் அவற்றில் இணைந்து செயற்படுவதில் இளைஞர்களுக்கு ஏதோ தயக்கம் அல்லது பிரச்சனை இருந்து இருக்கிறது என்பதாகும். ஏனென்றால் நான் பள்ளிப்பருவத்தில் கண்ட மிகச்சிறந்த பேச்சாளர்கள், கலைஞர்கள் எல்லாம் அவர்களது திறைமைகளை வெளிப்படுத்தாமல் மறைவில் வைத்திருந்தமை எதையோ கூறாமல் கூறியது. 

2013ம் ஆண்டின் ஆரம்பத்தில் எனது இறுதிப்பரீட்சையின் பின்னர் குறித்த ஒரு பாடத்தை மீள எழுத நிர்ப்பந்திக்கப்பட்ட பொழுதிலே தனிமையில் சிந்திக்க நிறைய நேரம் கிடைத்தது. பரீட்சைக்குப் பின்னர் கிடைக்கப்போகும் ஓய்வு நேரத்தில் என்ன செய்யப்போகிறேன் என்று எத்தனையோ கனவுகள் கதவு தட்டும். அந்தப் பொழுதுகளில் திலீபனுடன் சேர்ந்து கவிதைப்புத்தகம் ஒன்றை வெளியிடும் கனவுடன் இளைஞர்கள் சேர்ந்து உருவாகும் ஒரு அமைப்புப் பற்றிய கனவும் சேர்ந்துகொண்டது. ஒரு அமைப்பு ஒன்று உருவாவதற்கு முதலாவது தேவை ஒத்த எண்ணம் கொண்ட பலர் ஒன்றிணையவேண்டும். இந்த எண்ணம் வந்தபோது எனது நண்பர்கள் திலீபன், துஷ்மன் போன்றோருடன் பேசியபோது இதை ஒத்ததாய் தமக்கும் ஆசை உள்ளதைக் கூறினார்கள். அதுபோலவே நிரோஜன் ஜெயபரன் இன்னும் சில நண்பர்களும் வழக்கம் போல நான் என்ன முயற்சி எடுத்தாலும் தமது ஆதரவு கட்டாயம் உள்ளதைக் கூறினார்கள்.  

ஆனால் ஐந்தாறு பேர் போதாது என்ற உணர்வும் அதைவிட வவுனியா முழுவதும் இருக்கும் தமிழார்வம் கொண்ட இளைஞர்களை இணைக்க ஒரு சிறந்த திட்டம் அவசியம் என்பதால் அது சிந்தனையில் மட்டுமே இருந்தது. அதேவேளை வவுனியாவில் ஏற்கனவே செயற்பட்ட அமைப்புக்களில் ஒன்றில் எனது ஆசான்கள் இருந்ததால் நான் உடனே அதிலே இணைந்து செயற்படக்கூடிய வாய்ப்பு இருப்பினும் ஏற்கனவே அந்த அமைப்பில் இணையாமல் தனித்து உள்ளவர்கள் எப்படியும் வர வாய்ப்பில்லை என்பதால் பொறுத்திருந்தேன்.

அந்த வேளைதான் உணர்வுகளால் ஒன்று பட்டவர்களை தேடி இணைப்பது எப்படி என்று கண் முன்னே புதிதாய் தோன்றிய அமைப்பொன்று ஒரு நிகழ்வில் செய்துகாட்டியது. இலங்கைத் தமிழ் விவாதிகள் கழகத்தின் சொற்சிலம்பம் அந்த நிகழ்வு. விவாதம் என்ற பொது ஆர்வாத்தால் ஒன்றிணைந்த கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளின் முன்னாள் விவாதிகள் அவர்களை ஒத்த ஆர்வமுள்ளவர்களையும் சமூகத்திலுள்ள தமிழார்வலர்களையும் இணைத்து அந்த விழாவில் மிகப்பெரும் கூட்டத்தை திரட்டியிருந்தார்கள். அதில் எனக்கும் சுழலும் சொற்போரில் பேச ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த நிகழ்வு எனது கனவின் சாத்தியப்பாட்டைக் காட்டியது. 


இதன் பின்னர் இலங்கைத் தமிழ் விவாதிகள் கழகம் தனது பணிகளை இலங்கை முழுவதிலும் செய்வது பற்றிக்கூறியபோது அதன் தொடர்ச்சியாக வவுனியாவிலுள்ள எமது இளைஞர் அமைப்பை உருவாக்கினால் என்ன என்ற சிந்தனையும் எழுந்தது. ஆனால் பாடசாலையிலோ பல்கலைக் கழகங்களிலோ விவாதிகளாகச் செயற்பட்டவர்கள் அதற்குரிய ஆதாரத்துடன் வந்தால்தான் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளமுடியும் என்ற அவர்களது கொள்கை கொஞ்சம் நெருடலாக இருந்தது. நண்பன் துஷ்மனுக்கும் அது அறவே பிடிக்கவில்லை. அத்துடன் எமது கனவு தனியே விவாதம் பற்றிய மன்றம் ஒன்றாக இருக்கவில்லை அத்துடன் எந்த அனுபவமும் இல்லாதவர்களும் இணைந்து செயற்பட ஏதுவான ஒரு அமைப்பை உருவாக்கவேண்டும் என்று எண்ணி விவாதிகள் கழகத்தின் தொடர்ச்சியான ஒரு அமைப்பின் சிந்தனையை பிற்போட்டோம். 

இதற்கிடையில் எனது நண்பர்கள் சிலருக்கு இலங்கை விவாதிகள் கழகத்தின் செயற்பாடுகள் பற்றிக்கூறி அத்துடன் எமது பிரதேச விவாதிகளையும் இணைய கலைஞர்களையும் இணைப்பது பற்றிப்பேசியதுடன் அவர்களுக்குத் தெரிந்த ஏனைய ஆர்வலர்களின் தொடர்புகளைக் கொஞ்சம் கொஞ்சம் பெற ஆரம்பித்தேன். முதலில் எனக்கு நெருக்கமான மற்றும் நான் பாடசாலையில் கற்கும் காலங்களில் கலை முயற்சிகளில் ஈடுபட்டவர்கள், எனக்கு நேரடியாக அறிமுகமானவர்களை அழைத்துப் பேசினேன். அவர்களுக்குத் தெரிந்தவர்களின் விபரங்களைத் திரட்டச் சொன்னேன். அந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது நண்பன் அங்கு நண்பன் நிரோஜனுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த ராஜேஸ்வரன் அண்ணா எனக்கு அறிமுகம் ஆனார். 

எமது பாடசாலையில் கல்வி கற்றுப் பின்னர் தனது சுய முயற்சியால் வளர்ந்து ஜனாதிபதி விருது பெற்ற மேடை அறிவிப்பாளராகிய அவரும் தன்னுடைய இலக்கியச் செயற்பாட்டுக்கு ஒரு தளத்தினை தேடிக்கொண்டிருந்தார். நாம் முன்னெடுக்கின்ற எந்த முயற்சியிலும் பங்கேற்பதாக வாக்களித்தார். இது நடந்து ஒரு வாரத்திற்குள்ளாக மொரட்டுவைப் பல்கலைக்கழகம் ஒழுங்கு செய்திருந்த அகில இலங்கை மட்டத்திலான விவாதப்போட்டியில் நடுவராகப் பங்கேற்கும் வாய்ப்பினை நண்பன் வர்ணன் ஏற்படுத்திக் கொடுத்து இருந்தார். இதில் நானும் நண்பன் துஷ்மனும் அத்துடன் இலங்கைத் தமிழ் விவாதிகள் கழகத்தைச் சேர்ந்த நண்பர்கள் பலரும் நடுவர்களாகப் பங்கேற்றோம். 

இதன் போதான அனுபவங்கள் வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கான கலை இலக்கியத்துரையிலான ஊக்குவிப்பு அவசியம் என்பதை எமக்கு உணர்த்தியது. அதை விட இதனை அடிக்கடி செயற்படுத்தவும் அருகிலிருந்து கண்காணிக்கவும் அங்கேயே ஒரு அமைப்புத் தேவை என்று புரிந்தது. அத்துடன் பிரதேசத்துக் பிரதேசம் கலைகளின் பண்பில் சில மாறுதல்கள் இருப்பதால் குறித்த பிரதேசத்தைச் சார்ந்தவர்கள் பயிற்சி கொடுக்கும்போது ஒரு புரிந்துணர்வும் கூடவே ஒரு உணர்வு ரீதியான பங்களிப்பும் இருக்கும் என்பதால் அங்கே இருப்பவர்களால் அது இயக்கப் படவேண்டும் என்றும் உணர்ந்தோம். 

இந்த உணர்வுகள் ஏற்பட்ட அதே இடத்திலேயே எமது பாடசாலை பழைய மாணவனும் விவாதியுமான நண்பன் கஜனைச் சந்தித்து விரைவில் நாம் ஏதாவது செய்யவேண்டும், அதற்காக ஒரு முறை சந்திக்கவேண்டும் என்ற விருப்பத்தைப் பதிவு செய்தேன். அவரும் தனது பங்களிப்பு கட்டாயம் இருக்கும் என்ற உறுதிப்பாட்டை ஆர்வத்துடன் வழங்கினார். குறித்த போட்டிக்கு எமது பாடசாலை மாணவர்களுக்கு விவாதப் பயிற்சியாளராக வந்திருந்த நண்பன் நிக்சலனைச் சந்தித்தார். எமது பாடசாலைமுன்னாள் விவாதிகளை மீள ஒருங்கிணைப்பதில் ஆர்வமாகவும் இருந்தார். அவரிடம் ஏனைய விவாதிகளின் தொடர்புகளைத் தேடச்சொல்லி அன்றே கூறினேன். 

இதன் பிறகு Facebook மூலமாக நண்பர் ஜெனனைத் தொடர்பு கொண்டேன். அவரும் எமது பாடசாலையின் முன்னாள் விவாதி. அவர் மாணவராக இருந்தபோதே அவர் எனக்கு அறிமுகம். அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் ஒருமுறை கொழும்பு வரவும் ஒரு வெள்ளிக்கிழமை மாலை அவருடன் கலந்துரையாடவும் அவரை கம்பன் கழகத்துக்கு அழைத்துச் சென்று ஜெயராஜ் ஐயாவுடன் பேச வைக்கவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அன்றைய தினம் ஜெயராஜ் ஐயா கூறிய உற்சாகப்படுத்தும் வார்த்தைகள் எமது தீர்மானத்தை மேலும் உறுதிப்படுத்தியது. 

எல்லோரும் அமர்ந்து பேச ஒரு வாய்ப்பினை உருவாக்க முற்பட்டோம்...

தொடரும்..

"தமிழால் வையகத்தலைமை கொள்வோம்"

எமது Facebook பக்கம் - https://www.facebook.com/groups/ThamizhMamanram/


No Response to "தமிழ் மாமன்றம் தோற்றமும் தொடர்ச்சியும்... - எனது அனுபவங்கள் 2"

 

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...