திங்கள், 13 ஜனவரி, 2014

தமிழ் மாமன்றம் தோற்றமும் தொடர்ச்சியும்... - எனது அனுபவங்கள் 3

Posted on PM 2:01 by செல்வராஜா மதுரகன்

 

நான் நிக்சலன், ஜெனன், கஜன் போன்றோருடன் இணைந்து எமக்குத் தெரிந்த இளம் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் திரட்டி ஒரு சந்திப்பை நிகழ்த்த விரும்பினோம். அதற்கான முன்னோட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலே நான் Facebook இலே விவாதிகள் முற்றம் என்ற பெயரில் ஒரு Group இனை உருவாக்கி முதலில் நாம் அறிந்த விவாதிகளையும் ஒரு சில கவிஞர்களையும் இசைக் கலைஞர்களையும் அதில் இணைத்தேன். நண்பர்களும் அவர்கள் அறிந்தவர்களை இணைத்தார்கள். 
அதன் அறிமுகச் செய்தியாக இவ்வாறு பதிவிட்டேன்.

"இந்த குழுவின் முதல் நோக்கம் எமது பிரதேச விவாதிகள், பேச்சாளர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒருங்கிணைப்பதாகும். இதன் மூலம் எதிர்காலத்தில் எமது பிரதேச மாணவர்களின் திறன்விருத்திக்கு எம்மால் முடிந்தவரை பங்களிப்பதுடன் எமது ஆர்வத்துக்கும் வெளிப்பட்டுக்கும் எம்மாலேயே களம் அமைக்கும் முயற்சிகளிலும் ஈடுபட முடியும் என்பது எம் நம்பிக்கை. முழுமையான வடிவம் வரும்வரை இந்தக்குழு Facebook இலே Secret Group என்ற வகையில் செயற்படும் ஆனால் உறுப்பினர்கள் தங்களுக்கு தெரிந்த குறிந்த துறை ஆர்வலர்களை இந்த குழுவிற்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்."

கொஞ்சம் கொஞ்சமாக  அந்தக்குழுவின் உறுப்பினர்கள் அதிகரித்த வேளையில் 16/06/2013 இலே ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்தோம். அதன் ஏற்பாடுகளை ஜெனன், நிக்சலன், கஜன், அனுஜன் ஆகியோர் முன்னின்று செய்தனர். கிட்டத்தட்ட 40 பேர் கலந்து கொள்வதாக வாக்களித்தும். இறுதி நேர மாற்றங்களால் 23 பேரே கலந்து கொண்டார்கள். ஆனாலும் எமக்குள் ஒரு இனம் புரியாத உற்சாகமும் நம்பிக்கையும் என் தெரியுமா.. ஏனென்றால் வவுனியாவில் ஒரு இலக்கியம் தொடர்பான கலந்துரையாடலுக்கு 15 பேர் வருவதே பெரிய விடயம் என்று இருந்த காலம் அது... :)

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஆசிரியர்கள் இருவர்,  சென். அன்ரனிஸ் கல்வி நிலைய அதிபரும் கம்பன் கழகத்தின் நீண்டநாள் உறுப்பினருமான கஜரூபன் ஆசிரியர் ஆகியோர் முன்னிலையில் பல பாடசாலைகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் பழைய மாணவர்களும், சில மாணவர்களுமாக 23 பேர் கலந்து கொள்ள வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஐயாத்துரை மண்டபத்தில் எமது கூட்டம் நடந்தது. நாம் சிறுவர்களாக இருக்கும்போதே வவுனியாவில் பேச்சு மற்றும் நடிப்புத்துறையில் சாதித்த கார்த்திகேயன் அண்ணா மற்றும் சஜிந்திரா அண்ணா ஆகியோரின் வருகை மேலும் உற்சாகம் தந்தது.

நான் எனது அறிமுக உரையிலே குறிப்பிட்ட விடயங்கள் எமது தலைமுறையினரில் பலர் திறைமைகளை வெளிப்படுத்த களம் இன்றியோ அல்லது விருப்பம் இன்றியோ வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள். பொருத்தமான உதாரணங்கள் இல்லாததால் அடுத்த தலைமுறையினரிடம் கலை இலக்கிய ஆர்வம் குறைந்து வருகிறது. பல் துறை ஆர்வம் குறைவதால் அவர்கள் வாசிப்பின் வீச்சு குறைகிறது. இது ஆளுமை அற்ற வெறும் நூலறிவு பெற்ற தலைமுறையை தோற்றுவிக்கக்கூடும். எனவே எமது நோக்கங்கள் எம்மைப்போன்ற ஆர்வலர்களின் திறமை விருத்திக்கும் திறமை வெளிப்பாட்டுக்கும் களம் அமைப்பதோடு அடுத்த தலைமுறையையும் எங்களுடன் அழைத்துச் செல்லல். அதற்கு என்ன செய்யலாம்? என்ற கேள்வி அனைவரிடமும் எழுப்பப்பட்டது. அனைவரினதும் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. 

அதிலே குறிப்பாக எமது பாடசாலை ஆசிரியர்களும், மாணவர்களும் சில பழைய மாணவர்களும் எமது பாடசாலைக்கு விசேட கவனம் எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். அந்த இடத்திலே ஒரு விடயத்தை நாம் தெளிவு படுத்தினோம். ஒரு பாடசாலைக்குள் மட்டுப்படுத்தி எமது செயற்பாடுகள் அமையாது. ஏனென்றால் ஒட்டு மொத்தமாக எமது பிரதேச மாணவர்கள் அனைவரையும் சம திறமை உள்ளவர்களாக வளர்த்து எடுப்பதுதான் எமது நோக்கம். ஆரம்பத்திலே வவுனியாவிற்குள் மட்டும் செயற்பட்டாலும். ஒவ்வொரு அடியாக ஏனைய வன்னி மாவட்டங்களையும் தொடர்ந்து தேவை அதிகமுள்ளவற்றுள் எங்களால் இயன்ற இடங்களிலும் செயற்படப்போகின்றோம் என்பதைக் கூறினோம். அதை விட தனியே ஒரு பாடசாலை மட்டும் போட்டியின்றி வளருமாயின் அதன் திறமை தேய்ந்து போகுமேயன்றி வளரும் நிலை தோன்றுவது குறைவு என்பதைக் கூறினோம். 

அடுத்ததாக நாம் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு எமக்குள்ள தெரிவுகளைப் பரிசீலித்தோம். எமக்கு முன்னே மூன்று தெரிவுகள் இருந்தன. ஒன்று வவுனியாவில் உள்ள அமைப்புக்களில் ஒன்றுடன் இணைந்து செயற்படுவது. இரண்டாவது இலங்கைத் தமிழ் விவாதிகள் கழகம் அல்லது அதை ஒத்த ஏனைய அமைப்பொன்றின் வவுனியாக் கிளையாக செயற்படுவது. மூன்றாவது நாம் புதிய அமைப்பாக செயற்படுவது. இன்னொரு அமைப்பின் கிளையாக செயற்படுவது சிலவேளை எமது திட்டங்களைப் பாதிக்கலாம் என்பதால் இரண்டாவது தெரிவு நிராகரிக்கப்பட்டது. வவுனியாவில் உள்ள இலக்கிய அமைப்புக்களிடையான ஆரோக்கியமற்ற போட்டியில் தலையிட விரும்பாததால் அந்தத் தெரிவும் விடுக்கப்பட்டது. எனவே புதிய அமைப்பாக முடிவு செய்யப்பட்டு இடைக்கால செயற்குழு ஒன்று நிறுவப்பட்டது. 

இந்த இடைக்கால செயற்குழுவிலே ஐந்து பேர் உள்ளடக்கப்பட்டாலும். தேவைக்கேற்றவாறு மாற்றம் செய்யப்பட்டு முடிந்தவர்கள் பொறுப்புக்களைத் தாமே ஏற்றுச் செயற்பட்டனர்... 


வவுனியாவிலே தமிழார்வம் கொண்ட இளைஞர்களின் அமைப்பொன்று உருவானது...

தொடரும்...

"தமிழால் வையகத்தலைமை கொள்வோம்"

எமது Facebook பக்கம் - https://www.facebook.com/groups/ThamizhMamanram/


1 Response to "தமிழ் மாமன்றம் தோற்றமும் தொடர்ச்சியும்... - எனது அனுபவங்கள் 3"

.
gravatar
Unknown Says....

வடிவா சிந்தித்துப்பாருங்க முக்கியமான ஒரு நபரை குறிப்பிட மறந்திட்டாய்... ஒருவன் ஒரு நாள் மொரடுவ பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட விவாத போட்டி முடிவடந்த்ததும் மன்னிங் பிளேஸ் சந்தியில் வச்சு அவன்ட மனப்புலம்பலை குறிப்பிடாமல விட்டிட்டாய் தானே...

 

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...