சனி, 18 ஜனவரி, 2014

தமிழ் மாமன்றம் தோற்றமும் தொடர்ச்சியும்... - எனது அனுபவங்கள் 4

Posted on PM 6:24 by செல்வராஜா மதுரகன்


அமைப்பொன்று தோற்றம் பெற்று இடைக்கால செயற்குழுவுடன் இயங்கத் தலைப்பட்டபோது எமது செயற்பாடுகளை எங்கு ஆரம்பிக்கலாம் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதற்குரிய பதிலும் எம்மிடமே இருந்தது. பேச்சு மற்றும் விவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் எம்மில் நிறையப்பேர் இருந்ததால் பாடசாலை மாணவர்களுக்கான விவாதப்பயிலரங்கை தொடராக செய்யலாம் என்ற முடிவு எட்டப்பட்டது. இடைக்கால செயற்குழுவில் இருந்தோரும் வேறு சில நண்பர்களும் கூட்டாக இணைந்து ஒழுங்கமைப்பு வேளைகளில் ஈடுபட முதல் விவாதப்பயிற்சிக்குரிய நாளும் கனிந்து வந்தது. நண்பர்கள் நிக்சலன், கஜன், ஜெனன், அனுஜன் கிருத்திகன் ஆகியோர் ஒழுங்கமைப்பு வேளைகளில் மும்முரமாக ஈடுபட்டனர். 

முதல் விவாதப் பயிலரங்கு ஜூலை 23ம் திகதி கோவில்குளம் இந்துக்கல்லூரி, பெரியகோமரசன்குளம் மகாவித்தியாலயம், இலங்கைத் திருச்சபைத் தமிழ் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 25 மாணவர்களுக்காக கோவில்குளம் இந்துக்கல்லூரியில் நடாத்துவதென முடிவெடுக்கப்பட்டது. அதற்கு முதல் நாள் ராஜேஸ்வரன் அண்ணா, கிருபா அண்ணா, நிக்சலன், ஜெனன், கஜன் ஆகியோருடன் நான் கலந்துரையாடி விவாதப்பயிலரங்கு எப்படி நடாத்துவது என முடிவு எய்தப்பட்டது.
குறித்தநாளில் சிறப்பான வரவேற்புடன் 25 மாணவர்கள் மற்றும்  4 பொறுப்பாசிரியர்களின் பங்கேற்புடன் சஜிந்திரா அண்ணா, ராஜேஸ்வரன் அண்ணா, கிருபா அண்ணா, ஜெனன், கஜன், நிக்சலன், அனுஜன், ஜெசிதா, கிருத்திகன், பவித்திரன், ஆதவன் போன்ற உறுப்பினர்களின் நெறியாள்கையில் முதலாம் பயிலரங்கு நிறைவடைந்தது. 

இதற்கிடையில் எமது மன்றத்திற்கான பெயர் ஒன்றை சூட்டும் நோக்கில் எமது உறுப்பினர்களிடையே நேரடியாகவும் Facebook மூலமாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. எமது நோக்கு ஏற்கனவே இருக்கின்ற  தமிழ் இலக்கிய மன்றங்களின் பெயர்களை ஒட்டி அமையக்கூடாது அது ஒரு புதிய பெயராக அமையவேண்டும் என்பதாக இருந்தது. அதற்காக செயற்கைத் தன்மை கொண்ட பெயர்களையும் நாம் விரும்பவில்லை. நீண்டகாலம் பழகிய உணர்வினை ஏற்படுத்தக்கூடிய பெயராக இருக்கவேண்டும் என்று விரும்பினோம். நிறையப்பெயர்களைப் பரிசீலித்து நிறைவில் கம்பவாரிதி ஐயாவுடன் ஆலோசித்து நான் பரிந்துரைத்த தமிழ் மாமன்றம் எண்ணும் பெயர் முழுமனதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நாம் தமிழ் மாமன்றத்தினர் ஆனோம்...

தொடர்ந்து எமக்குரிய இலச்சினை ஒன்றையும் மகுட வாசகம் ஒன்றையும் தேர்வு செய்வதற்காய் பாடசாலை மாணவர்களிடையே ஒரு போட்டி நடாத்தத் தீர்மானிக்கப்பட்டது. போட்டி நிறைவுற்ற பின் மாணவர்கள் அனுப்பிய சின்னங்கள் மகுடவாசங்களில் சிறந்தவை தேர்வு செய்யப்பட்டு எமது ஆண்டு விழாவில் அவர்களுக்குப் பரிசளிப்பதாய்த் தீர்மானிக்கப்பட்டது. அதே வேலை அவர்களுடைய மகுட வாசகங்கள் மற்றும் இலச்சினைகள் எம்முள் ஏற்படுத்திய தாக்கங்களை சிந்தனைகளை மெருகேற்றி உறுப்பினர்களும் சிலவற்றைப் பரிந்துரை செய்தனர். பாரதியின் "வையத் தலைமை கொள்" அடியை மனதில் நிறுத்தி கம்பவாரிதி ஐயா அவர்கள் ஆலோசனையுடன் உருவாக்கப்பட்ட "தமிழால் வையத்தலைமை கொள்வோம்" என்ற வாசகம் எழுத்தாளர் கனடா மூர்த்தி அண்ணா அவர்களின் ஆலோசனையையும் ஏற்று "தமிழால் வையகத்தலைமை கொள்வோம்" என்று மாற்றப்பட்டு அதுவே மகுட வாசகமாக ஏக மனதாக ஏற்கப்பட்டது.

இலச்சினை ஒன்றுக்காக மாணவர்களின் சிந்தனையை மனதில் தொகுத்து நிக்சலன் வழிகாட்டலோடு வரையப்பட்ட இலச்சினை ஒன்றும் தம்பி கனிஷ்கன் வரைந்த இலச்சினைகள் இரண்டும் பரிசீலிக்கப்பட்டு நீண்ட ஆலோசனைக்குப்பின்னர் மேலே நாம் காட்டியுள்ள கனிஷ்கனால் வரையப்பட்ட இலச்சினை தெரிவு செய்யப்பட்டது.
இதெல்லாம் நடந்து கொண்டு இருக்கின்ற வேளைகளில் ஒரு புறம் எமது விவாதப்பயிலரங்குகள் மிகவும் வேகமாக நடைபெற்றுக்கொண்டு இருக்க எமது உறுப்பினர்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து கொண்டே இருந்தது....

தொடரும்...
"தமிழால் வையகத்தலைமை கொள்வோம்"

எமது Facebook பக்கம் - https://www.facebook.com/groups/ThamizhMamanram/


No Response to "தமிழ் மாமன்றம் தோற்றமும் தொடர்ச்சியும்... - எனது அனுபவங்கள் 4"

 

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...