வியாழன், 30 ஜனவரி, 2014

எனது திரையிசைப்பதிவுகள் - ஒரு பாதிக்கனவு

Posted on PM 10:39 by செல்வராஜா மதுரகன்


எத்தனையோ பேரைப் போல் திரைப்பாடல்களுக்கும்  தீராத  உறவு உள்ளது. பல உறக்கமற்ற இரவுகளில் உணர்வுகளை நகர்த்திச் செல்ல இசைதான் தோள்  கொடுத்து இருக்கிறது. நான் ரசிக்கும் பாடல்களைப் பற்றி பல பொழுதுகள் எழுத நினைத்தாலும் கைகள் அந்தப் பொழுதுகளில் எப்படியோ கட்டப் பட்டு விட்டன. இன்றைக்கு இந்தப் பாடல் காதில் விழுந்ததும் எழுதாமல் இருக்க இயலவில்லை. 
காதல் திரைப்படத்தின் பாடல்களில் இருந்து நான் நா முத்துக்குமாரின் பாடல் வரிகளுக்கு அடிமையானேன். இருந்தாலும் இந்தப்பாடலில் அவர் கைக்கொண்ட கற்பனைகள் என்னை சிலிர்க்க வைத்தன. வரிகளுடன்  அந்த சிலிர்ப்பையும் இங்கே பதிவிட விரும்புகிறேன். 


பாடல் - ஒரு பாதி கதவு
திரைப்படம் - தாண்டவம் 

ஆண்குரலில் ஆரம்பமாகிறது பாடல் 

"ஒரு பாதிக் கதவு நீயடி 
மறு பாதிக்கதவு நானடி
பார்த்துக் கொண்டே  பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்கக் காத்திருந்தோம் "

காதலர்களைக் கதவுகளாக்கி  உலவ விடுகிறார் நா முத்துக்குமார்
இரண்டு வித படிமங்களின் தளத்திலே நகர்கிறது பாடல்....
பார்த்துக் கொண்டே பிரிந்திருப்பது என்றால் என்ன என்று யாருக்காவது தெரியுமா.. 
அதிலுள்ள சுகம் என்ன என்றாவது உணராமல் விளங்குமா...
அனுபவிக்காமலே உணர வைக்கின்றன இந்த வரிகள்.

கதவு செய்து நிலையில் மாட்டப்பட்ட நாள் முதலே இரு பாதிகளுக்கும் யாரும் சொல்லாமலே புரியும் உனக்கு நான்தான் எனக்கு நீதான் என்று.
ஆனாலும் இருவரும் தாமாகச் சேர முடியாது வேறு ஒருவர்தான் பூட்டி வைக்கவேண்டும். உறுதியாக நிச்சயிக்கப்பட்ட உறவுகள் நெருக்கமாக இருந்தாலும் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு சேரும் காலம் வரை காத்து இருப்பதன் சுகம் இயல்பாக எங்களுக்குள் ஊடுருவும்.

இந்த நேரத்தில் தான் பெண்குரல் இந்த உணர்வை மேவ வைக்கும்.

"ஒரு பாதிக்கதவு நீயடா
மறு பாதிக்கதவு நீயடா
தாள் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீசக்காத்திருந்தோம்"

நீயும் நானும் தாள் திறந்து கிடக்கின்ற ஒரே கதவின் பாதிகள்தான் ஆனால் எம்மைச் சேர்த்து வைப்பதுதான் சுகம் என்று நினைக்கிறாயா தேவை இல்லை.
காற்று வீசும் போது கதவிரண்டும் படபடவென அடித்துக்கொள்ளும் அப்போது ஏதோ ஒரு கணத்தில் இரண்டு கதவுகளும் உரசி விட்டுப்பிரிந்து செல்லும். அந்த கண நேர ஸ்பரிசமே எனக்குப் போதும் வாழும் காலம் முழுவதும் கழித்து விட என்கிறது பெண் குரல். 

இதற்குப் பின்னர் கதவுகளாக மாறிப் பாடலைக் கேளுங்கள்.. கதவுகளோடு நீங்களும் காணாமல் போகலாம்...


பகிரல் தொடரும்.. 

 


No Response to "எனது திரையிசைப்பதிவுகள் - ஒரு பாதிக்கனவு"

 

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...