புதன், 26 பிப்ரவரி, 2014

திரையிசை மனப்பதிவுகள் 2 - அடடா என்மீது தேவதை வாசனை

Posted on PM 9:44 by செல்வராஜா மதுரகன்


திரைப்படம் - பதினாறு
இசை - யுவன் ஷங்கர் ராஜா
பாடியோர் - ஹரிஹரன், பெல்லா ஷிண்டே
பாடல் - ஸ்னேகன்
ஹரிஹரன் குரலுக்கு பொதுவாகவே நான் அடிமை, அத்துடன் பெல்லா ஷிண்டேயின் மாயக்குரலும் சேர்ந்து என்னைக் கட்டிப்போட்ட பாடல் இது. பாடலைக் கேட்டுக்கொண்டே இந்தக் கட்டுரையை வாசியுங்கள்.
காதல் வந்த ஒரு பெண்ணுக்குள் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன அதுதான் நிகழ்வு. இது காலம் காலமாக சினிமாவில் பாடல் எழுதப்பட்டு வந்த ஒரு சந்தர்ப்பம்தான். ஆனால் கற்பனை புதியது.

ஒரு பெண்ணுக்குள் காதல் வந்தால் வெளியே என்ன மாற்றம் நிகழும்,?கண்ணாடி முன் நிற்கும் நேரம் கூடும், முகத்தில் எப்போதும் புன்னகை அரும்பும், தெருவோரப் பிச்சைக்காரன் வரை அன்பும் நீளும். உள்ளுக்குள் என்ன மாற்றம் நிகழும்? அது எல்லோருக்கும் ஒன்றுதான். தம்மை கொஞ்சம் வித்தியாசமாக உணர்வார்கள், இன்னும் சொன்னால் விசேடமாக உணர்வார்கள். Feeling special என்று ஆங்கிலத்தில் கூறுவது போல.
இந்தப் பாடலில் நாயகி தன்னை தேவதையாக உணர்கிறாள். வெறும் கற்பனையில் மட்டுமல்ல, அது அதீதமாகி அவளது மேனியில் தேவதை வாசனை வீசுவதாக உணர்கிறாள். 

"அடடா என்மீது தேவதை வாசனை காதல் இதுவோ
உனையே எங்கெங்கும் காட்சிகள் காட்டிடும் காதல் இதுவோ"

அடுத்தது எழுதி எழுதி சலித்த வரி. காணும் இடமெங்கும் காதலனே நிறைந்து இருப்பது போன்ற எண்ணம். 

காதலின் ஆரம்பத்தில் மனம் ஒரு பிச்சைக்காரனைப் போல் யாசிக்கும், 
"உனைக்காணும் வரம் போதும்"

அந்த அற்ப சந்தோசத்தினுள் உலகத்தையே மறக்கும். சிறிய ஸ்பரிசங்கள் பெரிய மகில்வினைக் கொணர்ந்து தரும்.
"எதிர்காலம் வசம் வசம் வரும்"

"உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி" என்பதுவும் இதுபோலவே சிறு ஸ்பரிசத்தில் சுயம் மறக்கும் நிலைதான். அவன் மனதிற்குள் பூக்கள் போல மகிழ்வு பூக்கிறது.
இங்கே நாயகியின் எதிர்காலம் விதி வசமிருந்து அவள் வசமே வருகிறது, வெறும் பார்வை மூலம்.

அது மட்டுமல்ல அவள் செல்கின்ற பாதை அனைத்திலும் மழையாகத் தூறி அவளைக் குளிர்த்தப்போகிறது அவன் தரிசனம். 
"வழிப் பாதை மரம் யாவும்
எனக்காக மழை மழை தரும்"
அதுவும் வானில் இருந்து விழும் துளிகள் போல அனைத்தையும் நனைக்கப்போவதில்லை, அவள் காதலன் தரிசனம் தானே,
மரத்திலிருந்து விழும் தூறல் போல அவளுக்காக மட்டும் மரம் மழை சிவிறுகின்றது.


காதலன் உணர்வு சற்று வித்தியாசமாக இருக்கிறது. அவனுக்கு உலகமே திடீரென வர்ண மயமாகிறது. லேசா லேசா பாடலில் "கலர் கலர் கனவுகள் விழிகளிலே" என்று வருவது போல, இவன் வாழ்வே வண்ண மயமாகிறது. அதை எப்படி வெளிப்படுத்துவது என்று புரியவில்லை. உவமை பிறக்கிறது.
"உயிரில் ஒரு கோடி வானவில் பூத்திடும் காதல் இதுவோ"

அவனுக்குள் இருந்த வண்ணங்கள், சுவாசத்தில் வெளியேறிக் காற்றில் அலைகின்றன. அவளை எதிரே கண்டதும் மீண்டும் ஓடி வந்து ஒன்று சேர்கின்றன. அவனுக்குள் இருந்த உணர்வு அவளுக்குள்ளும் பற்றிக்கொள்கிறது.
"எதிரே நீ வந்தால் வானவில் தோன்றிடும் காதல் அதுவோ"

காதல் வந்ததும் அனைத்துமே இனிமையாகத்தான் இருக்கிறது. இனிமை உடலுக்குள் நிறைந்துபோக கண்களில் வழிகின்ற கண்ணீரில் இருந்துகூட சர்க்கரை தானாகத் திரள்கிறது. 
"ரம்மியம் ததும்பும் கனவு 

உன்னை கண்டதும் பிறந்ததே

கண்களில் வழியும் நீரில் 

இன்று சர்க்கரை திரளுதே"

அடுத்த அற்புதமான இடம் ஒன்று, ஒரு முரண் அணியின் வெளிப்பாடு. வாழ்க்கையில் எமது அமைதியை சத்தம் குழப்பலாம். ஆனால் காதலில் எமது அமைதியைக் காதலனின்/ காதிலியின் மௌனம் கூடக்கெடுக்கலாம். அதுவும் சாதாரணமாக அல்ல இடி வந்து மனதில் விழுவது போல மௌனம் எம்மைத் தாக்கி நிம்மதியைக் கெடுக்கும். 
"மௌனம் வந்து இடியைப்போல மனதின் மீது விழுந்ததோ"

இதற்கு மேலும் விரித்துப் பொருள் உரைக்க அவசியமில்லை என நினைக்கின்றேன். பாடலின் உணர்வுடனே இந்த அழகான வரிகளையும் கேட்கும்போது பொருளுக்கு அவசியம் இருக்காது.

"காற்றினில் அலையும் இறகு 
எந்தப் பறவை உதிர்த்ததோ
காதலில் மயங்கும் மனது 
அந்தக் கடவுளும் கொடுத்ததோ"

"பூட்டிய கதவின் இடுக்கில்
புது வெளிச்சம் நுழைந்ததோ
தாய்மையின் விரலைக்கொண்டு
நம்மைக் காதலும் வருடுதே..




தொடரும்....


3 Response to "திரையிசை மனப்பதிவுகள் 2 - அடடா என்மீது தேவதை வாசனை "

.
gravatar
தனிமரம் Says....

அருமையாக பாடலை ரசித்து எழுதி இருக்கும் சகோ வாழ்த்துக்கள்.

.
gravatar
செல்வராஜா மதுரகன் Says....

நன்றி தனிமரம்..

நன்றி தனபாலன் மற்றும் ராஜி ஆகியோருக்கு..

.
gravatar
test Says....

வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...