வெள்ளி, 3 ஜூலை, 2015

கவிதாசன்

Posted on AM 12:53 by செல்வராஜா மதுரகன்


கவிதாசன்




தமிழ்த்திரையிசையில் கவித்துவம் பற்றி நண்பன் சுதர்சனுடனான facebook கலந்துரையாடல் ஒன்றின்போது எழுதத்தோன்றிய விடயங்கள் இவை. சுதர்ஷன் இயல்பிலேயே வைரமுத்துவின் தீவிர ரசிகன். நான் வைரமுத்துவை வெறுப்பவன் என்றில்லை. ஆனால் அவரது சில படைப்புக்களை மட்டும் ரசித்தவன். சுதர்ஷனது குறிப்பொன்றில் "தமிழில் ஒரு உயர்ந்த மொழி அமைப்பை ஆழமான காதல் உணர்வோடு உருவாக்கியவர் அவர்தான். அறிவுமதி, வாலி எல்லாம் வேறு ரகம்" என்று குறிப்பிட்டு இருந்தார். அது என்னைக் கொஞ்சம் சிந்திக்க வைத்தது, அது தொடர்பான எனது தனிப்பட்ட கருத்தினை மனம் அலசியது. 

வைரமுத்துவுக்கு முதல் என்ன நடந்துகொண்டிருந்தது என்று கேள்வி எழுப்பினேன். "சங்க இலக்கியங்கள்ல மட்டும் இதே அழகும் ஆழமும் இருந்தது. வைரமுத்துவுக்கு முதலும் காதல் பாடல்கள் வந்தது. இந்த ஆழம் இல்லை. இதைச் சினிமாவில் சரியா உள்வாங்கினது மணிரத்னம்." என்று அழகாகப்பதில் சொன்னார். எங்கள் இருவரதும் வாசிப்பு முரண்படும் இடங்களில் முக்கியமானவர் வைரமுத்து, எனவே எனது கருத்துக்களை விரைவில் பதிவிடுவதாக வாக்களித்தேன். அது இன்றுதான் நிறைவு பெற்றது.

- *****- ***** - ***** -

சமகாலத்திரையிசையில் மிகவும் பற்றுக்கொண்டவன் நான் வானொலிப்பெட்டியில் பாடல்கள் கேட்ட காலம்முதல், அதனைக் Casette இலே பதிவு செய்து கேட்ட காலம் கடந்து, Audio CD, Mp3 காலம் கழிந்து கைத்தொலைபேசியில் காதுக்குள் இசை புகும் காலம் வரை வாழ்க்கையில் ஒரு முக்கிய இடம் இசைக்கு இருந்தது.

உயர்தரம் கற்கையில் கால்வாசி நேரம் படித்தது போக மிகுதி நேரங்களில் பாடல்தான் ஒலிக்கும். நினைவு தெரிந்து மிகச்சிறுவயதில் ஒரு பாடலில் இசைக்கோர்ப்புத்தான் முதலில் என்னை ஈர்த்துக்கொண்டிருந்தது. இளையராஜா, ஏ ஆர் ரகுமான், தேவா போன்ற பெயர்கள் மெல்ல மெல்ல வாயில் உலவத்தொடங்கின. பதின்ம வயதுகளில் குறித்த சில பாடகர்கள் குரல் கவரத்தொடங்கியது. உன்னிகிருஷ்ணன் ஹரிஹரன் ஆகியோர் பாடல்களுக்குப் பெரிதுமே அடிமையாகி இருந்தேன். 

உயர்தரம் படிக்கும் இரவுகளில் தனிமையில் பாடல்களைக் கேட்கும்போதுதான் வார்த்தைகள் மனதுக்கும் விளையாட ஆரம்பித்தன. கவிதை பற்றிய அறிவும் பிடிப்பும் தேடலும் அதிகமாகத் தொடங்கிய அந்த வயதில் பாடல்வரிகளில் உட்புதைந்த அர்த்தங்கள் எனது இரவுகளைத் தின்று போட்டன. ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் வைரமுத்து என்னை முழுமையாக ஆக்கிரமித்து இருந்தார் அதிலும் இளையராஜா பாலசுப்பிரமணியம் வைரமுத்து கூட்டணி வார்த்தைகளை மென்று தின்னத் தூண்டியது.
//விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்..//
//மனதோடு திரைபோட்டு மறைக்கின்ற மோகம்
மழை நீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்//
//ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை வாராமல் போய்விடுமா// சொல்லிக்கொண்டே போக இங்கு இடம் போதாது...

- *****- ***** - ***** -

காலம் கடக்கக் கடக்க முன்னுக்கும் பின்னுக்கும் நகர்ந்து போயினேன், அந்த சமாலத்தில் எழுதிக்கொண்டிருந்த  நா. முத்துக்குமார் "கண்ணீர்த்துளிகளைக் கண்கள் தாங்கும் கண்மணி காதலின் நெஞ்சம்தான் தாங்கிடுமா" என்று புல்லரிக்கச் செய்தார். "அலை கரையைக் கடந்த பின்னர், நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி" என்று மனதைப் பொங்கச்செய்தார். எல்லாமே ரசிக்கிறோம், வெவ்வேறு பட்ட தளங்களில் வேறுபட்ட மனநிலைகளில் நின்று. காலத்தால் வேறுபட்ட கவிஞர்களை ஒப்பிட இயலுமா என்ற கேள்வி மனதுக்குள் எழாமல் இல்லை. ஆனால் திரையிசையில் வார்த்தைகள் கடந்த பொருளாழம், காலம் வெல்லும் இலக்கியத்தரம் என்ற கண்ணோட்டத்திலும், சுதர்ஷன் குறிப்பிட்ட மொழியழகையும் கொண்டு அளவிட்டுப் பார்க்கும்போது எனது கருத்துக் கொஞ்சம் முரண்படுகிறது,

கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலி என்ற மூவரது பங்களிப்பையும் ஒருசேரப் பார்த்தால் தமிழ்த்திரையுலகின் இலக்கியப்பதிவுகளின் பெரும்பங்கு இவர்களின் பெயர்களாலேயே அளவிடப்படவேண்டியது. மற்றொரு பக்கமாகப் பார்த்தால் இன்றுவரை உள்ள படைப்புக்களில் இவர்களது பங்களிப்பை நீக்கிய பின் எஞ்சியிருப்பது வெறும் பத்துவீதம் மட்டுமே... இந்தப்பின்புலத்தில் கண்ணதாசனைக் கொஞ்சம் அலசிக் கட்டுரையை நிறைக்க விரும்புகிறேன். 

அப்துல் ரகுமான் வார்த்தைகளின் படி "மீன் விற்கும் சந்தையிலே விண்மீன்கள் விற்றவர்" கண்ணதாசன். வார்த்தைத் தெரிவிலும், சந்தக்கடைவிலும், பொருள்ப்பொதிவிலும் பல்வேறு எல்லைகளைத் தொட்டவர். அவரது காதல்சார் பாடல்களை இங்கு முன்னிறுத்த முனைகிறேன்.

- *****- ***** - ***** -

பாலும் பலமும் என்ற திரைப்படத்தில் "நான் பேச நினைப்பதெல்லாம்" என்ற ஒரு பாடலை எழுதியிருப்பார், டி. எம். எஸ் - சுசீலா என்ற அற்புதமான இணை அதைப்பாடியிருக்கும்.


ஒவ்வொரு வரியாக எடுத்துச் சொல்வது இங்கு ஒவ்வாது என்பதால் அந்தப்பாடலில் ஒரு பந்தியை இங்கு பகிர்கிறேன்...
//சொல்லென்றும் மொழியென்றும் 
பொருளென்றும் இல்லை 
பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு 
விலையேதும் இல்லை 
விலையேதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக 
உயிர் சேர்ந்த பின்னே 
உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி 
வேறேதும் இல்லை 
வேறேதும் இல்லை//

விலையில்லை என்று அவரே வியந்த அந்த சொல்லாத சொல் காலங்கள் பல கடந்து இன்றைய பாடல்களிலும் இன்னும் நீள்கிறது. (உதாரணங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன்)

- *****- ***** - ***** -


காதலின் பிரிவின் சோகம் பற்றி எழுதாதோர் இல்லை... அவை எல்லாவற்றுக்கும் பாடம் சொல்லித் தந்த பாடல் "நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா"
//
மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா?//
//
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்கத் தெரியாதா?//

சிறுவயதிலே பார்த்த சிவாஜியின் படங்களில் புதிய பறவை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று, கிட்டத்தட்ட ஏதோ விறுவிறுப்பான நாவல் படிப்பதாக எண்ணம் வந்தது அதைப்பார்த்தபோது. 
அதிலே ஒரு பாடல் வரும் 
//பார்த்த ஞாபகம் இல்லையோ..
பருவ நாடகம் தொல்லையோ..
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ..//

இறந்து போன மனைவி கண்முன்னே நின்று பாடுகிறாள், அது உண்மையா பொய்யா என்ற கேள்வி மனதுள்.. அவள் சொல்கிறாள்...
//எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சிந்திப்போம் இந்த நிலவை..//

நான் எப்போதோ எழுதிய கவிதை ஒன்றே எனக்கு நினைவுக்கு வந்தது..
//பிறவிகள் தோறும்
உந்தன் பருவத்தின் கனவுகளில்
நான் வருவேன்,
பாதையோரங்களில் இடறிவிடும்
பழைய கல்லொன்றைப் போல...//

- *****- ***** - ***** -
நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் பலர் பார்த்திருக்கக் கூடும். கே.வி ஆனந்த் அனேகன் கதைக்காக கை வைத்த இடங்களில் இந்தப் படமும் ஒன்று. ஸ்ரீதர் என்ற பெயருக்கு என்ன மதிப்பு என்பதை எனக்கு உணர்த்திய படம். இந்தப் படத்தை மூன்று முறை பார்த்திருப்பேன் முதன் முறை ஒன்பது வயதில், இரண்டாவதாக பதினைந்து வயதில் இரண்டும் சண் டிவி இல் தற்செயலாகப் பார்த்தவை. மூன்றாவது முறையாக தேடி எடுத்து பல்கலையில் இருக்கும் போது பார்த்தேன். மூன்று முறையும் நான் பற்ற அனுபவங்கள் வேறுபட்டவை. ஆனால் இந்தப் பாடல்மட்டும் மாறாமல் என்னைக்கட்டிப் போட்டது.


இந்தப் பாடலில் ஒரே ஒரு வரி போதும் அதன் உள்ளடக்கத்தைச் சொல்ல...
//காலங்கள் தோறும் உன்மடி தேடிக் கலங்கும் என் மனசு..//
ஜென்மங்கள் கடந்த காதலை விபரிக்க ஒரு வரி போதுமாகிறது...

- *****- ***** - ***** -

"நிறம் மாறாத பூக்கள்" இந்தப் பெயரைக் கேட்ட உடனே அந்த ரேடியோ கண்ணுக்குள் வருகிறது, பின்னர் அந்த வள்ளம், அதுக்குப் பிறகு விஜயனின் முகம் அப்பிடியே ராதிகா முகம், சுசீலாவின் குரலிலே "ஆயிரம் மலர்களே" மனதுக்குள் மலர்கிறது.


//ஆயிரம் மலர்களே மலருங்கள் மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் பாடுங்கள்
காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ?
நெருங்கி வந்து செல்லுங்கள் செல்லுங்கள்...//

வானத்திலே நிலா முழுமதியாகலாம், பிறையாகத் தேயலாம், அமாவாசையாக இருளலாம், ஆனால் நிலா பற்றி மனதிற்கும் மலரும் கற்பனைகள் என்றும் மாறாதே. அது போலவே சூழல் மாறலாம், காட்சி மாறலாம், ஆளே மாறலாம், ஆனால் மனதில் தோன்றிய காதல் மாறாதே.

//வானிலே வெண்ணிலா
தேய்ந்து தேய்ந்து வளரலாம்..
மனதிலுள்ள கவிதைக்கோடு மாறுமோ?
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
உன்பாட்டும் என்பாட்டும் ஒன்றல்லவோ..//
கீழ்வரும் வரிகளுக்கு விளக்கம் தேவை இருக்காது.. உணர்ந்து பாருங்கள்..
//கோடையில் மழை வரும்
வசந்த காலம் மாறலாம்
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ..
காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ?..//
- *****- ***** - ***** -

இவைதான் கண்ணதாசன் கவித்துவத்தின் உதாரணமா என்று யாரும் கேட்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். அந்தக் கடலில் ஒரு கரையில் நான் கையால் துழாவிப்பார்க்கிறேன். என் மனதில் முதலில் வருபவை சிலவற்றை சொல்கிறேன். கண்ணதாசனுக்கு முகவரி எழுத முனைந்ததை நினைக்க சிரிப்பும் வருகிறது. இன்னும் எப்போதாவது நேரமும் மனமும் ஒத்துழைத்தால் கண்ணதாசனில் இன்னும் கொஞ்சமோ அல்லது வாலியுடனோ என் பதிவு வரும். 

//வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும் 
மரகதக்கிள்ளை மொழிபேசும் 
பூவானில் பொன்மேகமும் உன்போலே 
நாளெல்லாம் விளையாடும்
என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன் 
உயிரன்றோ//

தொடரக்கூடும்...

மதுரகன்.


1 Response to "கவிதாசன்"

.
gravatar
த.இராமலிங்கம் Says....

அன்பான மது, உங்கள் கருத்துரையைப் படித்தேன். கண்ணதாசனின் கவிதைகளைப் பூரணமாகத் தெரிந்து உணர வாய்ப்பில்லாதவர்களே வைரமுத்துவின் பாடல்வரிகளை உயர்த்திப் பேச முடியும். வைரமுத்துவின் சில கவிதைகள் மிக அழகானவை என்பதில் உங்களோடு பூரணமாக ஒத்துப்போகிறேன். ஆனால் கண்ணதாசன், தொடர்ந்து வாலி போன்றவர்களின் படைப்புக்களின் செழுமை வேறு.... நல்ல பாடல் வரிகளையும் சொல்லியிருக்கிறீர்கள்....

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...