வியாழன், 30 டிசம்பர், 2010

கடந்து போகிறதா ஓர் ஆண்டு? பாகம் 2(கலையுலகும் நானும்)


கடந்துபோகிறதா ஓர் ஆண்டு..? பாகம் - 1(நானும் பதிவுலகமும்)

தலைப்பைப் பார்த்து ஏதோ தமிழ்ப் பேச வராத புதுமுக நடிகை ஒருவரின் பெட்டி என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். என்னதான் மருத்துவ பீடத்தில் கற்றாலும் எனக்குள் இருக்கும் கலையார்வம் தங்குதடையின்றி இங்கும் பொங்கிக் கொண்டுதான் இருக்கின்றது நேரம் வரும்போது பயன்படுத்திக் கொள்கிறேன்..
நான் ஒரு வாசிப்பு பைத்தியம். எனது வாசிப்பு உலகத்தைப் பற்றி நீண்ட ஒரு பதிவு தனியாக எழுத வேண்டும்.. கிட்டத்தட்ட ஏழு எட்டு வயதில் பிடித்த வாசிப்பு பைத்தியம் அந்த அந்த வயதுகளுக்கு உரிய புத்தகங்களுடன் நகர்ந்து இன்று என்னவென்று இல்லாமல் வியாபித்து இருக்கின்றது. இந்த வருடத்தில் எனது வாசிப்பு வீச்சினை எடுத்துப் பார்த்தால். இலக்கியங்களுள் டாக்டர். மு. வரதராசனாரின் கிடைத்தற்கரிய பல புத்தகங்களை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரது பல இலக்கிய விமர்சன நூல்களை வாங்கி வாசித்தேன். மேலும் எங்கள் பிரதேச எழுத்தாளரும் எனது பேச்சுலக குருவுமாகிய தமிழ்மணி அகளங்கன் ஐயா அவர்களின் பல இலக்கிய நூல்களை வாசித்தேன். 
நாவல்கள் மற்றும் சிறுகதைகளைப் பார்த்தால் எனது ஆஸ்தான எழுத்தாளர் சுஜாதாவின் பல குறுநாவல்கள் கொண்ட ஒரு தொகுப்பு கிடைத்தது. அத்துடன் சுந்தர ராமசாமி, ல. ச. ராமாமிர்தம் போன்றோரின் எழுத்துக்களை பரிச்சயப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்தது.
இதை விட மொழிபெயர்ப்பு நாவல்களில் ரசிய மொழிபெயர்ப் பான செம்மணி வளையல் என் நெஞ்சுக்குள்ளேயே வார்த்தைகளாக நிற்கிறது இன்னும்.. வழக்கம் போல எனது தட்டில் இன்னும் பல கவிதைப் புத்தகங்கள் முளைத்தன.. இந்த வருடம் மட்டும் நான் கிட்டத்தட்ட ஐம்பது புத்தகங்களை வாங்கியுள்ளேன். எனது குட்டி நூலகம் நூற்றுஅறுபது புத்தகங்களை தாண்டி விட்டது என்று நினைக்கின்றேன். குறிப்பாக வருட இறுதியில் நண்பன் ஜனுதர்சன் பரிசளித்த செம்மொழி மாநாடு தொடர்பான புத்தகம் விலை மதிப்பிலா சொத்து.

அடுத்ததாக நான் தலைவராக செயற்பட்ட கொழும்புப் பல்கலைக்கழக இந்து மன்றத்தின் வருடாந்த கலைவிழாவினை பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் ஜூன் 12ம் திகதி மிக விமரிசையாக நடாத்தியது பெருமைக்குரிய விடயம். பார்வையாளர்கள் எதிர்பார்த்த அளவு வராமையும் இறுதி நிகழ்வான நாடகம் அரங்கேறாமையும் தவிர எந்தக் குறையும் இன்றி இந்து மன்ற வரலாற்றில் பாரிய விழாவாக நடைபெற்றது, நிகழ்விற்கு பிரதம விருந்தினராக நீதவான். மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களும் கௌரவ விருந்தினராக எழுத்தாளர் கவிஞர் தமிழ்மணி அகளங்கன் அவர்களும் சிறப்பு விருந்தினராக சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியக் கலாநிதி. கணேசரத்தினம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். என்னுடன் தோளோடு தோள் நின்று விழா சிறப்புற உதவிய இதர நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் நிர்வாகக் குழு சாரா நண்பர்களுக்கும் முக்கியமாக மருத்துவ பீடத்தினை சார்ந்த எனது அணித்தோழர்களுக்கும் நன்றிகள். தனியாக கூற வேண்டிய நன்றி இருவருக்கு, ஒரு சிக்கலான பிரச்சனையால் வழக்காடு மன்றம் நடப்பதே கேள்விக்குறியானபோது உடனே தயாராகி வழக்காடு மன்றத்தில் பங்கேற்ற எமது பீட சிரேஷ்ட மாணவரும் சிறந்த நண்பருமாகிய பரதன் அண்ணாவிற்கும், விஞ்ஞான பீட பழைய மாணவரும் என்னுடைய ஆரம்பகாலங்களில் பேச்சிற்கு வழிகாட்டியாக அமைந்த கோகுலதாசன் அண்ணாவிற்கும் உரித்தான நன்றிகள் அவை.


அடுத்ததாக கூறப்பட வேண்டிய விடயம் கொழும்புப் பல்கலைக்கழ தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா. இந்து மன்றத்தின் அப்பன் தமிழ் மன்றம் என புடம் போட்டு காடியது போல் இருந்தது விழா.. பல்கலைக்கழக வரலாற்றிலேயே பொறிக்கப் படவேண்டிய விழாவொன்றை கவிக்கோ அப்துல் ரகுமானையும் அழைத்து நடாத்தியது, அந்த நிகழ்வில் அப்துல் ரகுமான் தலைமையிலான கவியரங்கில் நானும் பங்கேற்க கிடைத்த வாய்ப்பு என்னுடைய ஓட்டு மொத்த வாழ் நாளில் ஒரு நாளாகும்... இந்த இடத்தில் 
தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக் குழு, நிகழ்ச்சி ஒழுங்கமைப்புக் குழு குறிப்பாக தலைவர் கோபிதாஸ் ஆகியோருக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த ஒரு முக்கிய திருப்பு முனை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடை பெற்ற கம்பவாரிதி ஐயாவின் திருக்குறள் பற்றிய தொடர் சொற்பொழிவு. அதன்   அந்த இலக்கிய முழக்கத்தால் வசீகரிக்கப்பட்டு நண்பன் தனேசனின் உதவியுடன் ஐயாவின் அறிமுகம் கிடைத்ததும் பின்பு அவரிடம் நேரடியாக இலக்கியம் கற்கும் பேறு கிடைத்ததும் எனது இலக்கியப் பயணத்தினை மேலும் உறுதிப்படுத்தும் புள்ளிகள். 

இதை விடக் கூறுவதானால் எமது பீடத்தின் வாணிவிழா கடந்த வருடங்களை விட மிகவும் சிரத்தை எடுக்கப் பட்டு மிக அருமையான மேடை அமைப்பு மற்றும் ஒலி ஒளி அமைப்புகளுடன் வெகு விமரிசையாக நடாத்தப்பட்டது. அதற்கு தலைவர் பிரசாத் தலைமையிலான நிர்வாகக் குழுவிற்கு பாராடுதல்களை தெரிவிப்பதோடு, அங்கு நடை பெற்ற "பெண்மையின் ஆற்றலால் சமகாலப் பெண்களுக்கு வழிகாட்டுவதில் விஞ்சி நிற்பது பாரதி காட்டும் பாஞ்சாலியே, இளங்கோ காட்டும் கண்ணகியே" என்னும் படி மன்றத்திலும் "ஜயமுண்டு பயமில்லை மனமே" கவியரங்கிலும் பங்கேற்றமை மறக்க முடியா நிகழ்வுகள். 
எல்லாவற்றிலும் மேலான நிகழ்வாக சக்தி தொலைக்காட்சியால் நடாத்தப்படும் தமிழோசை நிகழ்வில் தெரிவுச் சுற்று முதலாம் சுற்று என்பவற்றில் வெற்றி பெற்று தற்போது இரண்டாம் சுற்றில் இருபது போட்டியாளர்களுள் ஒருவராக இடம்பெற்றுள்ளமை மிகவும் மனமகிழ்ச்சி தரும் விடயம். வரும் வருடத்தில் அந்தப் போட்டித்தொடரின் இறுதிச் சுற்றுக்குள் எப்படியும் நுழையவேண்டுமென்பது எனது ஆசை பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று..
இத்துடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்... ஆனால் எனது சொந்த வாழ்க்கைப் பயணம் பற்றிய பதிவு இதை அடுத்து பதிவிடப் பட உள்ளது. உங்கள் பார்வை மற்றும் ஆதரவு அங்கும் தேவை..

அன்புடன் 
மதுரகன்.

கடந்துபோகிறதா ஓர் ஆண்டு..? பாகம் - 1(நானும் பதிவுலகமும்)

2010 எனும் ஓர் ஆண்டு சப்தமின்றி எம்மைக் கடந்து செல்லத் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் ஒவ்வொருவருக்கும் நினைவுகள் கொஞ்சத்தை மறக்க முடியாத சம்பவங்களாக, மாறாத வடுக்களாக, என்றும் இனிய நினைவுகளாக எமக்குள்ளேயே விலகாது. அப்படியே எனது நினைவுகளுக்குள் இந்த ஆண்டு உதிர்த்துச் செல்கின்ற விடயங்களை கொஞ்சம் புரட்ட ஆசைப்படுகின்றேன். 
நான் வலைப்பூவொன்றை முதன் முதலாய் ஆரம்பித்தது 2005ம் ஆண்டில் என்று நினைக்கின்றேன். ஒரு சில கவிதைகளுடன் நின்று போனது அது. பின்பும் இப்படி ஓரிரண்டைத் தொடங்கி பாதியில் விட்டேன். பின்பு கடந்த வருடத்தில் இறுதிப் பகுதியில் தொடர்ச்சியாக ஒரு வலைப்பூவையாவது கொண்டு செல்ல வேண்டும் என்ற முடிவில் ஆரம்பித்ததுதான் இந்த மனதில் தெறித்த சாரல்கள்.
முதன் முதல் பயன்படுத்திய முகப்பு

என்னுடன் பேசும் பலர் எனது வலைப்பூவின் பெயரை மெச்சுவார்கள். அது எனக்கு சந்தோசமாக இருந்தது. ஏனென்றால் இயல்பாக எனது மனதில் உதித்த பெயர் அது. அதை விட ஆரம்பத்தில் என்ன எழுதுவது என்ற குழப்பம் இருந்தது. எனக்கு பிடித்ததை எழுதுவதா.. அல்லது அதுகளவு வாசகர்களை ஈர்க்கக்கூடிய விடயங்களை எழுதுவதா.. நான் மிகவும் ரசித்து எழுதும் ஒரு கவிதைக்கு கிடைக்கும் வாசகர்கள் அளவு மிகக் குறைவாக இருக்கும் வேளையில்.. சினிமா விடயங்கள் அற்பமாக இருந்தாலும் அதிக வாசகர்களை கொண்டுவருகின்றது. எப்படியோ தத்தி தத்தி ஓரளவு பதிவுகளை ஒப்பேற்றி விட்டேன். என்னுடைய ஒவ்வொரு பதிவையும் வாசிக்க ஒரு நூறு பேராவது நிரந்தர வாசகர்களாக உள்ளனர் அது மிகவும் மகிழ்ச்சி...
இரண்டாவது விடயம் தொழிநுட்பப் பிரச்சினைகள். ஏற்கனவே வலைப்பூ இருந்தும் அதிகளவு மாற்றங்களை செய்யாததால் தேவை இருக்கவில்லை, ஆனால் இந்தமுறை நான் வலைப்பூவினை அழகுபடுத்தும் முயற்சியில் இறங்கியபோது அடிக்கடி பிரச்சினைகள் சந்தேகங்கள் வரும் அப்போதெல்லாம் சக பதிவரும் நண்பருமான சதீஷ்(சதீஷ் இன் பார்வை) மற்றும் ராஜீவ்காந்த்(எனக்குள் ஒருவன்) ஆகியோரின்து உதவி அளப்பரியதாக இருந்தது. பதிவுலகில் நண்பர்கள் அவசியமென அப்போதுதான் உணர்ந்தேன்.. கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்ச நண்பர்கள் கிடைத்தனர். ஹரன்ஸ் - சுதாகரன் அண்ணா, அகசியம் - வரோ, முகிலனின் பிதற்றல்கள், பதியவும் பகிரவும் - ஸ்ரீதர்சன் ஆகியோர் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். இதைவிட யாரும் தவற விடப்பட்டிருந்தால் மன்னிக்கவும். அதை விட என்னுடைய ஒவ்வொரு பதிவினையும் வாசித்து கருத்துக்கூறும் நண்பர்களை மறக்க முடியாது. அதிலும் குறிப்பாக முகப்புத்தக நண்பர்கள்(Facebook) தான் நான் இவ்வளவு தூரம் பயணிக்க முக்கிய காரணம். எனவே அவர்களுக்கு இந்த இடத்தில் மனப்பூர்வமாக நன்றி கூறுகிறேன்..
நான் ஏறத்தாழ 52 பதிவுகள் எழுதியுள்ளேன் அவற்றுள் 50பிரசுரிக்கப் பட்டுள்ளன.(இரண்டு பாதியில் உள்ளது) எனது பழக்கம் எதைப்பற்றியாவது நினைவுக்கு வரும்போதே எழுதிவிட வேண்டும். பின்பு எழுதலாம் என்றோ பாதியில் இடைநிறுத்தினாலோ அது பின்பு அதோ கதிதான். இப்படி எழுதப்படாமல் போன பதிவுகள் ஏராளம். நான் எழுதியவற்றுள் சிலவற்றை மீட்டிப் பார்க்க விரும்புகிறேன். எழுதியவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த பதிவு உயிர்த்திருப்பு என்னும் சிறுகதைதான்.. அதற்குரிய இணைப்பு..
கூகிள் தரவுகளின் உதவியுடன் எனது வலைப்பதிவு பற்றிய சிறிய மீள் பார்வை.. 
அதிகளவு பேர் பார்வையிட்ட முதல் ஐந்து பதிவுகள்.
இங்கேயும் வசூலில் முன்னே நிற்பது எந்திரன்தான்... 

என்னுடைய வலைப்பதிவிற்கு அதிக பார்வையாளர்களை அனுப்பிவைத்த முதல் மூன்று நாடுகள்..
இந்தியா
இலங்கை
ஐக்கிய அமெரிக்க குடியரசு

இன்னும் எவ்வளவோ எழுதலாம்... ஆனால் வாசிப்பவர்களுக்கு அலுப்படிக்க விரும்பவில்லை.. அடுத்த அடுத்த பதிவுகள் இந்த ஆண்டில் என்னுடைய வாழ்வில் ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவங்கள் சுவையான நிகழ்வுகள் பற்றி எழுதப் போகின்றேன் கட்டாயம் அனைவரும் வாசிக்க வேண்டும்..


அன்புடன்
மதுரகன்..

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...